மும்பை: பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியா கடனுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
இந்த வட்டி குறைப்பானது அனைத்து கடன்களுக்கும் பொருந்தும் என்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த வட்டி குறைப்பானது ஜூலை 11 முதல் அமலுக்கு வரும் என்றும் இந்த வங்கி அறிவித்துள்ளது.
வட்டி குறைப்பு
இது ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தினை 7.60 சதவீதத்தில் இருந்து, 7.40 சதவீதமாக குறைத்துள்ளது இந்த வங்கி. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஒப்பிடும்போது 13 முறையாக குறைக்கப்பட்டுள்ள வட்டி விகிதமாகும். இது நிலவி வரும் நெருக்கடியான நிலையில் உள்ள, அதன் வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ வட்டி குறைப்பு- இன்று முதல் அமல்
இது கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தினை 5 - 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ள நிலையில், யூனியன் வங்கியும் தற்போது குறைத்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வட்டி குறைப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது நினைவுகூறத்தக்கது.
கனரா வங்கி & இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இதே மற்றொரு பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
இதே இந்த வாரத் தொடக்கத்தில் கனரா வங்கியானது, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் முறையே 10 அடிப்படை புள்ளிகள் மற்றும் 20 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரவேற்கதக்க விஷயம்
நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் வங்கிகள் தொடர்ந்து கடன்களுக்கான வட்டியினை குறைத்து வருவது வரவேற்கதக்க ஒரு விஷயமே. ஏனெனில் நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினால் முடங்கி போயுள்ள நிறுவனங்கள் பெருத்த அடி வாங்கியுள்ளன. இதன் காரணமாக வங்கிகளில் செலுத்தகூடிய கடன்களை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன.
ஓரளவுக்கேனும் பயன் தான்
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இந்த கடன்களுக்கான இஎம்ஐயினை செலுத்த கால அவகாசம் கொடுக்க வங்கிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தாலும், வட்டியில் எந்த மாற்றமும் இல்லை. ஆக இதன் காரணமாக எத்தனை மாதங்கள் ஆனாலும் நிலுவைக்கு உண்டான வட்டியினை செலுத்தியே ஆக வேண்டும். இந்த நிலையில் இந்த வட்டி குறைப்பானது இந்த மாதத்தில் குறைக்கப்பட்டிருந்தாலும் ஒரளவுக்கேனும் ஆறுதல் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.