யூ பி ஐ (UPI - Unified Payment Interface) என்று அழைக்கப்படும் இந்த சேவையை இன்று இந்தியாவில் சுமாராக 100 மில்லியன் (10 கோடி) மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த அக்டோபர் 2019 ஒரே மாதத்தில் மட்டும் இந்த யூ பி ஐ சேவையைப் பயன்படுத்தி 100 கோடி பணப் பரிமாற்றங்கள் நடந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதுவரை செக், நெட் பேங்கிங், ஏடிஎம், டெபிட் கார்ட்கள் வழியாக மட்டுமே, அப்பாவி மக்களிடம் பணம் பறித்துக் கொண்டிருந்த ஆன்லைன் திருடர்கள், இப்போது இந்த யூ பி ஐ சேவையைக் குறி வைத்து திருடத் தொடங்கி இருக்கிறார்கள்.
உதாரணம் 1
வங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் அல்லது வங்கி அதிகாரிகளைப் போலவே நம்மிடம் பேசத் தொடங்குவார்கள். அதன் பின் கொஞ்சம் அதிகார தொனியில், நம் டெபிட் கார்ட் விவரங்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். தரவில்லை என்றால், வங்கிக் கணக்கு மூடப்படும் என மிரட்டுவார்கள்.
டெபிட் கார்ட்
எனவே பயந்து நாமும் நம் டெபிட் கார்ட் விவரங்களைக் கொடுத்து விடுவோம். அதன் பிறகு நைச்சியமாகப் பேசி இந்த யூ பி ஐ-யில் பதிவதற்கான ஓடிபியை வாங்கிக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். நமக்கே தெரியாமல், அவர்கள் தனியாக யூ பி ஐ-யில் புதிய ஐடி அல்லது வேறு சில வி பி ஏ-க்களைத் பதிவு செய்து விடுவார்கள்.
காலி தான்
திருடர்கள், புதிதாக பதிவு செய்த வி பி ஏ (Virtual Payment Address)-க்கு ஒரு பாஸ்வேர்டை வைத்து நம் பணத்தை வழித்து விடுகிறார்கள். அவ்வளவு ஏன், நாம் எந்த டெபிட் கார்டைக் கொடுத்தோமோ, அந்த வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும், இவர்கள் வழித்து விடுவார்கள். திருடர்கள் பணத்தை திருடிய பின் தான் நமக்கே தெரிய வரும்.
உதாரணம் 2
உதாரணம் ஒன்றில் சொன்னது போல, வங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் அல்லது வங்கி அதிகாரிகளைப் போலவே பேசி ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யச் சொல்வார்கள். இந்த செயலியை நம் ஸ்மார்ட்ஃபோனில் டவுன் லோட் செய்த உடனேயே, நம் ஸ்மார்ட்ஃபோனின் மொத்த கட்டுப்பாடும் அவர்கள் கையில்.
போச்சே போச்சே
இன்று நம் ஸ்மார்ட்ஃபோனில் தான் நம் சகல விஷயங்களையும் பாதுகாத்து வைத்து இருக்கிறோம். நம் ஏடிஎம் பின் தொடங்கி, மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள முடியாத வங்கிக் கணக்கு எண், மனைவி குழந்தைகளின் பிறந்த நாள் வரை எல்லாவற்றையும் நம் ஸ்மார்ட்ஃபோனில் தான் வைத்து இருக்கிறோம். ஆக நம் ஃபோனில் கட்டுப்பாடு கிடைத்தால், அவர்களுக்கு கொண்டாட்டம் தானே..!
நடக்கிறதா..?
சமீபத்தில் கூட குஜராத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் க்ரெடிட் கார்ட் விவரங்களை, அவர் மூலமாகவே திருடி சுமார் 95,000 ரூபாயை வேறு சில வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து கொண்டதை படித்து இருப்பீர்கள். ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பணத்தையும் காவல் துறையினரால் சட்டென கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்... சாதாரண மக்கள் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும். இதில் இருந்து எப்படி உஷாராக இருப்பது.
உஷார்
பழைய அறிவுரைகள் தான்...
1. எக்காரணத்தைக் கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட் விவரங்கள், ஓடிபி போன்றவைகளை பகிராதீர்கள். வங்கி அதிகாரிகள் எனச் சொல்லி கேட்டால் கூட பகிர வேண்டாம்.
2. ஆஃபர்கள், பரிசு, எளிதில் கடன் போன்ற தேவையற்ற லிங்குகளில் க்ளிக் செய்ய வேண்டாம்.
3. வங்கி அதிகாரிகள் அல்லது வங்கி தரப்பில் இருந்து எப்போதுமே, போன் வழியாக மேலே சொன்ன விவரங்களைக் கேட்கமாட்டார்கள். எனவே உஷாரக இருங்கள்.


Click it and Unblock the Notifications