இந்தியாவில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான் சிறந்த முதலீட்டு திட்டங்களாக பார்க்கப்படுகிறது. இது முதலீட்டுக்கு பங்கமில்லாத, பாதுகாப்பான கணிசமான வருவாய் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களாக உள்ளன.
பொதுவாக நம்மில் பலருக்கும் இருக்கும் ஆசை என்றால் அது, இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும். அதிலும் மாத மாதம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்சன் தொகைபோல பென்ஷன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம்.
குறிப்பாக தனியார் ஊழியர்கள், சுயதொழில் செய்வோர் என பலருக்கும் மாத வருமானம் தரும், ஒரு பாதுகாப்பு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.
வயதானவர்களுக்கு பாதுகாப்பு
அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் மாதாந்திர வருவாய் பெற முடியும். குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்ற பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
அதிகபட்ச முதலீடு
இந்த திட்டத்தினை தனிநபர் அல்லது கூட்டு சேமிப்பு திட்டமாகவும் தொடங்கிக் கொள்ள முடியும். கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் செய்யும் முதலீடு அவர்களுக்கு சமமான பங்கு இருப்பதாக கருதப்படும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் 5 ஆண்டுகள் முதிர்வு காலமாகும். முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் நீட்டித்துக் கொள்ளலாம். அஞ்சலகத்தின் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது சிம்பிள் (Simple interest ) தான்.
கூடுதல் வட்டி கிடையாது
நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல அந்த முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது.
வட்டி குறையும் என கவலை வேண்டாம்
வட்டி விகிதம் ஆரம்பத்தில் எப்படியோ- திட்டம் முழுவதும் அப்படி தான்? அதே போல இந்த திட்டத்திற்கு அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை மாற்றும் எனினும் உங்களுக்கு ஆரம்பத்தில் என்ன திட்டம் வழங்கப்படுகின்றதோ? அதே விகிதம் தான் முழுமைக்கும் கிடைக்கும். ஆக வட்டி குறைந்தால், வருமானம் குறையுமே என்ற கவலை வேண்டாம்.
இருமுறையில் முதலீட்டு வாய்ப்பு
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டியினை உங்களது அஞ்சலக சேமிப்பு கணக்கில் கிரெடிட் செய்து கொள்ளலாம். அல்லது வங்கி கணக்கில் கிரெடிட் ஆகும் படியும் செய்து கொள்ளலாம். இதில் கிடைக்கும் வட்டி விகிதத்தினை தொடர் வைப்பு நிதி திட்டமாகவும் தொடர்ந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. ஆக உங்களது முதலீடானது இந்த திட்டத்தில் இருமுறையில் பெருகும் வாய்ப்பும் இந்த திட்டத்தில் உள்ளது.
கூடுதல் தொகை முதலீடு செய்தால்
இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்பு தொகைக்கு, சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தின் அடிப்படையிலேயே வட்டி வழங்கப்படும்.
இந்த கணக்கினை இடையில், அதாவது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும். அஞ்சலகத்தின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய நீங்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கினை வைத்திருக்க வேண்டும்.
வரி சலுகை கிடையாது
அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் நாமினி வசதியும் உண்டு. ஆக உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகையினை பெறுமாறு செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானமாக கருதப்பட்டு, அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். வரி சலுகை கிடையாது. வரி சலுகை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
மாத மாதம் எவ்வளவு வருமானம்?
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் தொகையானது 10.91 ஆண்டுகளில் இருமடங்காக மாறும்.
உதாரணத்திற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் 550 ரூபாய் வட்டி கிடைக்கும். இதே மாதம் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 1,100 ரூபாய் வட்டி கிடைக்கும். இதே 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 1,650 ரூபாய் வட்டி கிடைக்கும். இதே 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 2,200 ரூபாய் வட்டி கிடைக்கும். இதுவே 4.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 2,475 ரூபாய் வட்டி கிடைக்கும். ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதம் 4,950 ரூபாய் வட்டி கிடைக்கும்.