ஒரே நேரத்தில் பல கடன்கள் நம் கழுத்தை நெரிக்கும் போது எந்தக் கடனை முதலில் அடைப்பது என்ற குழப்பம் வரும். குறைந்த தொகை கொண்ட கடனை முதலில் அடைத்து விடலாமா? அல்லது அதிக வட்டி செலுத்தி கொண்டிருக்கும் கடனை முதலில் அடைக்கலாமா? என்ற கேள்விகள் மனதிற்குள் தோன்றும். கடனை திருப்பி செலுத்த இரண்டு மெத்தடுகளை பின்பற்றலாம். அவை என்ன என்பதையும்? இதனால் ஏற்படும் நன்மை என்ன? என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
2 மெத்தடுகள் என்னென்ன?: ஒன்று டெப்ட் அவலான்ச் (Debt Avalanche) மெத்தட் மற்றொன்று டெப்ட் ஸ்னோபால் (Debt Snowball) மெத்தட். இந்த இரண்டு மெத்தடுக்கும் ஒரு பொதுவான விதி இருக்கிறது. அது என்னவென்றால் எந்தக் கடனாக இருந்தாலும் அதற்கு சரியான முறையில் ஈஎம்ஐ செலுத்த வேண்டும். அதன் பிறகு மீதம் இருக்கும் தொகையைக் கொண்டு இந்த இரண்டு மெத்தடில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி கடனை அடைக்கலாம்.

டெப்ட் அவலான்ச் மெத்தட்: ஒரு மாதத்தில் ஈஎம்ஐ போக உங்களிடம் 5000 ரூபாய் மீதம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தொகையை அதிக வட்டி செலுத்தும் கடனுக்கு பயன்படுத்த வேண்டும். உதாரணமாக கிரெடிட் கார்டு கடன்களை எடுத்துக் கொள்ளலாம். தனிநபர் கடனைக் காட்டிலும் இந்த வகை கடன்களுக்கு வட்டி அதிகம்.
சில கிரெடிட் கார்டு வழங்குனர்கள் வருடத்திற்கு 42% வரை வட்டி வசூலிக்கின்றனர். எனவே உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் மீதமாகும் தொகையை கிரெடிட் கார்ட் கடனை அடைப்பதில் கவனம் செலுத்தலாம். இதனால் மறு மாதம் உங்களுக்கு வட்டி மிச்சமாகும். அதன் பின்னர் அடுத்த கடனை அடைப்பதில் கவனம் செலுத்தலாம். அதிக வட்டி செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள் இந்த அவலான்ச் முறையைப் பயன்படுத்தலாம்.
டெப்ட் ஸ்னோபால் மெத்தட்: உங்களிடம் ஒரு மாதத்தில் ஈஎம்ஐ போக 5000 ரூபாய் மீதமிருந்தால் சிறிய அளவிலான கடனுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். உதாரணமாக நீங்கள் ஒருவரிடம் ரூ.10,000 கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் அந்தக் கடனில் ரூ.5000 செலுத்தலாம். மீதி பாதியை மறுமாதம் செலுத்தினால் கடன் தீர்ந்து விடும்.
வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றை முழுமையாக முடிக்க பல மாதங்கள் எடுக்கும். எனவே அதை உடனடியாக முடிக்க முடியாது. ஆனால் சிறிய கடன்களை முழுமையாக முடித்து விடலாம். இதனால் நமக்கு ஒரு மனநிறைவு கிடைப்பதோடு சீக்கிரம் கடனை அடைத்து விடுவோம் என்ற நம்பிக்கையும் கிடைக்கும்.
இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது சின்ன சின்ன கடன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் போது அதிக வட்டி செலுத்திக் கொண்டிருக்கும் கடன்களை கவனிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும் பிரச்சனை தான். இது போன்ற கடன்களுக்கு உங்களுடைய பணம் அதிக அளவில் சென்று கொண்டிருக்கும். ஆனால் வெவ்வேறு கடன்களை பார்த்து பயந்து கொண்டு இருப்பவர்கள் சிறிய அளவிலான கடன்களை உடனடியாக முடித்தால் ஒரு வித தன்னம்பிக்கை கிடைக்கும். இதனால் மீதமுள்ள கடன்களை சீக்கிரம் அடைக்க முயற்சி செய்வீர்கள்.
யாருக்கு எந்த மெத்தேட் ஏற்றது?: கஷ்டப்பட்டு உழைத்த பணம் வட்டிக்கு செல்ல கூடாது என்று நினைக்கும் நபர்கள் அவலான்ச் மெத்தடை பயன்படுத்தலாம். அதுவே சின்ன சின்ன கடன்களை உடனடியாக அடைத்து விட்டு பெரிய கடன்களை மன நிறைவுடனும் தன்னம்பிக்கையுடனும் கையால நினைப்பவர்கள் ஸ்நோபால் மெத்தடை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications
