பொதுவாக தனியார் மற்றும் பொதுத்துறை சார்ந்த முதலீடுகளை செய்தால் பல வரி சலுகைகளை பெற முடியும். இது மட்டும் அல்ல இன்னும் பல வகையான வரி சலுகைகள் இருக்கின்றன.
எனினும் பலருக்கும் எதற்கு எவ்வளவு வரி சலுகை கிடைக்கும்? எப்படி நமது சேமிப்பினை அதிகப்படுத்த முடியும். எப்படி எல்லாம் வரிசலுகை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இரு வகையான வரிகள்
பொதுவாக வருமான வரி தாக்கல் செய்வோர் 80சி பிரிவின் கீழ் வரிசலுகை பெறுவர். இது பெரும்பாலானவர்களுக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும்,இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறையாக உள்ளது. பொதுவாக வரி செலுத்துவது என்பது நேரடி வரி, மறைமுக வரி என்ற இருவகைகள் உண்டு.
என்னென்ன வரிகள்
இதில் நேரடி வரி என்பது இந்தியாவில் உள்ளவர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்து வருமானம் கிடைத்தாலும், அவர்கள் இந்தியாவில் வரி செலுத்தியாக வேண்டும், இதே இந்தியாவில் வசிக்கவில்லை எனில், இந்தியாவில் இருந்து பெரும் வருமானத்துக்கு மட்டுமே வரி செலுத்தினால் போதுமானது.
இதுதவிர மூத்த குடி மக்கள், சீனியர் சிட்டிசன்ஸ், சூப்பர் சீனியர் சிட்டிசன்ஸ் என பிரித்து அவர்களுக்கு ஏற்ப வருமான வரி சலுகை அளிக்கப்படுகிறது.
பழைய வரி முறை
தற்போது இந்தியாவில் இரண்டு விதமான வரிகள் உள்ளது. ஒன்று பழைய வருமான வரி முறை, புதிய வருமான வரி முறை உள்ளது.
இதில் பழைய வருமான வரி முறையில் 2.5 - 5 லட்சம் ரூபாய்க்கு 5% வரியும், 5 - 10 லட்சம் ரூபாய்க்கு - 20% வரியும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் எனில், 30% வரியும் விதிக்கப்படுகின்றது.
புதிய வரி முறை
புதிய வருமான வரி முறையில் 2.5 - 5 லட்சம் ரூபாய்க்கு 5% வரியும், 5 - 7.5 லட்சம் ரூபாய்க்கு - 10% வரியும், 7.5 - 10 லட்சம் ரூபாய்க்கு 15% வரியும், 10 - 12.5 லட்சத்திற்கு 20% வரியும், 12.5 - 15 லட்சம் ரூபாய்க்கு 25% வரியும், இதே 15 லட்சத்திற்கு வருமானம் எனில் 30% வரியும் விதிக்கப்படுகின்றது.
இந்த இரு வரி முறைகளிலும் 2.5 லட்சம் ரூபாய்க்கான வரி என்பது கிடையாது.
மூலதன ஆதாய வரி
மேற்கண்ட வரி விதிப்பு முறைகள் என்பது மூலதன ஆதாய வரிகள் விதிக்கப்படுவதில்லை. இதில் நீங்கள் முதலீடு காலத்தை பொறுத்தே நீண்டகால மூலதன ஆதாய வரி, குறுகிய ஆதாய வரி என இரு வகையாக உள்ளது.
80 சி வரி எதற்கு?
வருமான வரி தாக்கல் செய்தவர்கள் பலருக்கும் இது தெரிந்திருக்கலாம்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C என்பது வருமான வரி செலுத்தும் தனிநபர் ஒருவர், தனது வருமானத்தில் வரி விலக்கு பெறக்கூடிய செலவினங்கள், முதலீடுகளைப் பட்டியலிட்டுக் காட்டுவதாகும். ஒருவர் ஒரு வருடத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குப் பெறுவதற்கு பிரிவு 80சி வழிவகை செய்கிறது. எனினும், வரி செலுத்தும் ஒருவர் திட்டமிட்டு செலவு செய்து பிரிவு 80C-யின் கீழ் வரிவிலக்கு கோரலாம்.
எதற்கெல்லாம் 80சி-யின் கீழ் சலுகை பெறலாம்?
லைஃப் இன்சூரன்ஸ், பொது வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்றிதழ், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம், யூலிப் இன்சூரன்ஸ் திட்டம், 5 ஆண்டு வரி சேமிப்புக்கான வைப்பு நிதி, நபார்டு வங்கியின் கிராமப்புற பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால் பிரிவு 80சி யின் கீழ் வரி விலக்கு பெறலாம்.
இது தவிர வீட்டுக் கடனுக்கான அசல் தொகை, முத்திரைத் தாள் கட்டணம், வீடு வாங்கும்போது செலுத்திய பதிவுக் கட்டணங்கள் மீதும் பிரிவு 80சி-யின் கீழ் வரி சலுகை பெறலாம்.
வட்டிக்கு வரி சலுகை உண்டு?
வீட்டுக் கடன் வாங்குபவர்கள் வருமான வரி சட்டத்தின் படி பிரிவு 24பி-யின் கீழ் வட்டி திருப்பிச் செலுத்தல் மீது வரி விலக்கு கோரலாம். இதில் 2 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு கோர முடியும். எனினும் நீங்கள் கடன் பெற்ற நிதியாண்டில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் வீடு கட்டப்பட வேண்டும்.அப்படி இல்லை எனில், 30,000 ரூபாய் மட்டுமே விலக்கு பெற முடியும்.
ஓய்வுகால சேமிப்புக்கு வரி சலுகை?
பொதுவாக சேமிப்புகளை அதிகரிக்கும் நோக்கில்,குறிப்பாக ஓய்வு காலத்திற்கான சேமிப்பினை அதிகரிக்கும் நோக்கில் அரசு சில சலுகைகளை அறிவித்து வருகின்றது.
பிரிவு 80CCC-ன் கீழ் நீங்கள் குறிப்பிட்ட ஓய்வூதிய நிதிகளில் முதலீடுகளுக்கு விலக்கு கோரலாம்.
இந்தப் பிரிவின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் ஒரு தனிநபராக இருக்க வேண்டும். குடியுரிமை பெறாத தனிநபர்கள் (NRI) கூட மேற்கூறிய பலன்களைப் பெறலாம்.
கல்வி கடனுக்கு வரி சலுகை
இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது பலருக்கும் ஒரு பெரும் கனவாக இருக்கிறது. இந்த கனவை நனவாக்க பலருக்கும் கல்விக் கடன் உதவுகின்றது. இந்த கடனுக்கான வரி சலுகையும் பெற முடியும். இது பிரிவு 80 இ-ன் கீழ் வரி சலுகை பெற முடியும். எனினும் கல்விக் கடனுக்கான வரி விலக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே பெற முடியும். 8 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் விலக்குகளை கோர முடியாது.
இன்சூரன்ஸில் வரிச் சலுகை
பொதுவாக பலரும் தனிநபர்கள் நிதிப் பாதுகாப்பிற்காகவும் என்பதை தாண்டி, வரி விலக்குகளிலிருந்து பயனடைவதற்காகவும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை பெறுகின்றனர். இது வருமான வரிச் சட்டத்தின் 80டி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
எனினும் திட்டத்தில், தனிநபர், மனைவி, குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் பிரீமியங்கள், சுகாதாரப் பரிசோதனை உட்பட 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றால் 25,000 ரூபாய் வரை விலக்கு அளிக்கப்படும். இதே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50,000 ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம். மேலும், பெற்றோரின் உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களுக்கும் ஒருவர் வரிச் சலுகையைப் பெறலாம்.
மாற்றுத் திறனாளி சலுகைகள்
மாற்றுத் திறனாளி ஒருவரின் மனைவி, குழந்தைகள், பெற்றோர், சகோதரர்கள் மருத்துவச் செலவைச் சந்திக்கும் தனிநபர், பிரிவு 80DD இன் கீழ் விலக்கு கோரலாம்.
வரி செலுத்துபவர் உடனிருப்பவர்களுக்கும் ஏதேனும் செலவு செய்தால், 75,000 ரூபாய் விலக்கு கிடைக்கும். சார்ந்திருப்பவர் 80% அல்லது அதற்கு மேல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், ரூ.1,25,000 விலக்கு கிடைக்கும்.