சமீபகாலமாக மக்களிடையே கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு ஏற்றார் போல் வங்கிகளும் அதிக பரிவர்த்தனை கொண்ட பயனாளர்களைக் குறி வைத்து ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. கிரெடிட் கார்டு இன்றைய தலைமுறையின் உற்ற தோழனாகவே மாறி வருகிறது. ஏன் தெரியுமா? சொந்த பந்தங்களே 1 ரூபாய் தர யோசிக்கும் இந்தக் காலத்தில் செலவு செய்து விட்டு பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்ற நன்மைதான், கிரெடிட் கார்டின் பயன்பாடு அதிகரிக்க காரணமாகி போனது. அப்படி இருக்கையில் ஒரு கிரெடிட் கார்டு உரிமையாளர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் அவருடைய சார்பில் பணத்தை யார் திருப்பிச் செலுத்த வேண்டும்? இந்த கேள்வி பலருக்கும் எழும் என்று நினைக்கிறேன். இதற்கு ரிசர்வ் வங்கி சில விதிகளை வகுத்துள்ளது. அதன் விவரங்களைப் பார்ப்போம்.

கிரெடிட் கார்டு லோன்: கிரெடிட் கார்டு லோன் பிணையம் இல்லா கடன் என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது நகை கடன் பெற நகைகளை பிணையமாக வழங்க வேண்டும், வீட்டுக்கடன் பெற வீட்டு பத்திரத்தை பிணையமாக வழங்க வேண்டும், ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு எதையும் அடமானமாக தரத் தேவையில்லை. இதனால் யார் கிரெடிட் கார்டு பெறுகின்றனரோ? அவர்கள் தான் அதைச் சட்டப்பூர்வமாக திருப்பிச் செலுத்த வேண்டும்.
யார் திருப்பிச் செலுத்துவது?: ஒருவேளை இறந்தவர் பிக்சட் டெபாசிட் அல்லது சேமிப்பு கணக்கு, காப்பீட்டு திட்டம் அல்லது வேறு ஏதேனும் அசையா சொத்துக்களை வைத்திருந்தால் வங்கிகளே சட்ட நடவடிக்கை எடுத்து அவர் செலவு செய்த தொகையை வசூலிக்கும்.
வாரிசுகள் கட்ட வேண்டுமா?: இந்த விஷயம் தான் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தும். ஒருவேளை கிரெடிட் கார்டு உரிமையாளர் இறந்துபோனால் அவர் வாரிசுகள் அந்த பொறுப்பை ஏற்க வேண்டுமா? என்றால் அது கட்டாயம் அல்ல! இறந்தவரின் மனைவி, பிள்ளைகள் அல்லது பெற்றோர் என யாரிடமும் வங்கிகள் சட்ட ரீதியான நெருக்கடியை கொடுக்க முடியாது. ஆர்பிஐ-யின் விதிமுறை அதுதான். நீங்கள் கிரெடிட் கார்டு பெறும்போது இறந்தவருக்கு கோ அப்ளிகண்டாக இருந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது இறந்தவர் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது நீங்களும் கையெழுத்திட்டிருந்தால், அதற்கு நீங்களே பொறுப்பு! அப்படி இல்லை என்றால் பயப்படத் தேவையில்லை. மேலும் இறந்தவரிடம் எந்த சொத்தும் இல்லை எனும் பட்சத்தில் வங்கிகள் அவருடைய கடனை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து தள்ளுபடி செய்துவிடும்.
வங்கிகள் மிரட்ட அனுமதி உண்டா?: சில நேரங்களில் வங்கி ஊழியர்கள் இறந்தவரின் குடும்பத்தினரை பணம் கேட்டு மிரட்டுவதையோ அல்லது நாகரீகமாக பேசுவதையோ பார்த்திருப்போம். இது போன்ற விஷயங்களுக்கு ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஏற்கனவே கிரெடிட் கார்டு பெற்றவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினரிடம் சென்று, அவர்களை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது சட்டப்பூர்வ குற்றமாகும். அதுவும் இறந்தவர் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது அவருடைய குடும்பத்தினர் சார்பில் யாரும் கையெழுத்து போடவில்லை என்றால் கண்டிப்பாக அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் வங்கி ஊழியர்கள் மிரட்டி பணம் வாங்கவே கூடாது. இது போன்ற சமயத்தில் நீங்கள் அந்த வங்கி மற்றும் வங்கி ஊழியரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications