இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் கடன் என்ற சொல்லை பயன்படுத்தாதவர்கள் யாருக்கும் இருக்க முடியாது.
இந்த கொரோனாவால் மாடி வீட்டு அம்பானி முதல் ரோட்டுக் கடை அண்ணாச்சி வரை, ஒவ்வொருவரும் கடன் வாங்கியுள்ளனர். கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அப்படி அவசர தேவைக்கு எங்கெல்லாம் கடன் வாங்கலாம். எப்படியெல்லாம் வாங்கலாம். வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் மீது கடன் வாங்கலாம்
இன்றைய கால கட்டத்தில் அவசர தேவைக்கு மக்கள் பெரிதும் நம்பியிருப்பது தங்கத்தினை தான். தங்கத்தின் மீது 1000 ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். பெரும்பாலும் தங்கத்தின் சந்தை விலையில் 75 சதவீதம் வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் 90 சதவீதம் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான வட்டி 7 - 29 சதவீதம் வரை இருக்கக்கூடும். பொதுவாக 36 மாதங்களுக்குள் கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டியிருக்கும். கடனில் 2 சதவீதம் வரை செயலாக்கக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கடனைப் பெற, 21 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் குறுகிய காலத்தில் இந்த கடனை வாங்க முடியும்.
பிக்சட் டெபாசிட் மீது கடன் பெறலாம்
நிரந்தர வைப்பு நிதி எனப்படும் பிக்ஸட் டெபாசிட் கணக்கின் மீது கடன் கிடைக்கும். பிக்ஸட் டெபாசிட் கணக்கின் மதிப்பில் 90 - 95 சதவீதம் வரை கடன் கிடைக்கும். இதற்கான வட்டி விகிதம் 0.5 - 2 சதவீதம் வரை இருக்கலாம். ஆனால், பிக்ஸட் டெபாசிட் முதிர்வுக்காலம் முடிவதற்குள் கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டும்.
எல்லாவற்றையும் விட, வழக்கமாக இந்த வகையான கடன் பெறும்போது செயலாக்கக் கட்டணம் இல்லை. குழந்தைகளின் பெயரில் செய்யப்பட்டுள்ள டெபாசிட் மீது கடன் வழங்கப்படுவதில்லை. வங்கியில் பிக்ஸட் டெபாசிட் கணக்கு வைத்துள்ள, குறைந்தபட்சம் 21 வயது நிறைந்தவருக்குத் தான் இந்த கடன் வழங்கப்படும் (எனினும் இந்த நிபந்தனை வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்).
கார் மீது கடன்
உங்களது காரை வைத்து கூட உங்களால் கடன் பெறலாம். காரின் மதிப்பில் 50 - 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும். இதற்கான வட்டி 7-16 சதவீதம் வரை இருக்கக்கூடும். 1 முதல் 8 ஆண்டுகளுக்குள் கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டியிருக்கும். கடனில் 1-3 சதவீதம் பணம் செயலாக்கக் கட்டணமாகப் பெறப்படும். இஎம்ஐ வட்டி, ஸ்டாம்ப் டூட்டி போன்ற பிற கட்டணங்களும் உண்டு. கார் வாங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் இருந்தால் தான் கடன் பெற முடியும். எனினும் இந்த விதிகள் வங்கிகளுக்கு வங்கி சற்று வேறுபடும்.
தேசிய சேமிப்பு பத்திரத்தினை வைத்து கடன் பெறலாம்
என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்புச் பத்திரங்கள் மூலம் அவற்றின் மதிப்பில் 85 - 90 சதவீதம் வரை கடன் பெற முடியும். இதன் மீதான வட்டி வங்கிக்கு வங்கி மாறுபடும். சான்றிதழுக்கு மதிப்பு உள்ள காலம் வரை கடனைத் திரும்பச் செலுத்தி முடிப்பதற்கான அவகாசம் தரப்படும். கடனில் 1 சதவீதம் வரை செயலாக்கக் கட்டணமாகப் பெறப்படும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் யார் பெயரில் இருக்கிறதோ அவரது பெயரில்தான் கடன் வாங்க முடியும்.
பங்குகள், மியூச்சுவல் பண்டு, பத்திரங்கள் மீது கடன்
செக்யூரிட்டீஸ், மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், பத்திரங்கள் மீது 10 கோடி ரூபாய் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இது வங்கி மாறுபடுகிறது. சில வங்கிகள் பங்குகளின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் வரை கடன் கொடுகின்றன. இதே பத்திரங்கள் மற்றும் கடன் நிதி மீது 85 சதவீதம் வரை கடன் தரப்படும். இதற்கு வட்டி 10 முதல் 13 சதவீதம். கடனைத் திரும்பச் செலுத்த ஓராண்டு அவகாசம்.
நிலத்தின் மீது கடன்
பெரும்பாலான வங்கிகளில் நிலத்தின் மதிப்பில் 70 சதவீதம் வரையில் வழங்கப்படுகிறது. இது செயல்பாட்டுக்கட்டணம் 1 சதவீதம் விதிக்கப்படுகிறது. சில வங்கிகளில் கடன் தொகைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் சம்பளம் பெறும் தனி நபர்கள் 2 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையில் தவனை காலத்தினை தேர்தெடுத்து திரும்ப செலுத்தலாம். இதற்கு 7 - 15 சதவீதம் வரை வட்டி பெறப்படும். ஆக வங்கிகள் கேட்கும் சரியான ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் சில நாட்களிலேயே கடனை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்சூரன்ஸ் திட்டங்கள்
இன்சூரன்ஸ் திட்டங்களின் மீட்புத்தொகை மதிப்பில் அதாவது சரண்டர் மதிப்பில் 70 - 90 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். இதற்கு 7 - 12 சதவீதம் வரை இருக்கும். இது கடன் தவணையைத் திரும்பச் செலுத்தவதைப் பொறுத்தும், சிபில் ஸ்கோரை பொறுத்தும் மாறுபடும். காப்பீடுத் திட்டம் முதிர்வடையும் காலத்தைப் பொறுத்து கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் மாறும். வங்கிக் கடனில் 250 - 500 ரூபாய் வரை செயலாக்க கட்டணமாகப் பெறுகின்றன. சில வங்கிகள் கடன் மதிப்பினை பொறுத்தும் இந்த கட்டணம் வசூலிக்கின்றன. மீட்புத்தொகை மதிப்பை விட கடன் அதிகமானால் இன்சூரன்ஸ் திட்டம் ரத்தாகிவிடும்.
பொது வருங்கால வைப்பு நிதி மீது கடன்
பி.பி.எப். (PPF) எனப்படும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கின் அடிப்படையில் கடன் பெற முடியும். இது மற்ற கடன்களை விட மலிவானது. இதற்கு வட்டி விகிதம் 1 சதவீதமாகும். இரண்டு ஆண்டுகள் நிறைவில் பி.பி.எப். கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 25 சதவீதம் வரை கடன் கிடைக்கும். பி.பி.எப். கணக்குக்கு கிடைக்கும் வட்டியைவிட குறைந்தது 1 சதவீதம் அதிகமாக வட்டி வசூலிக்கப்படும். 3 ஆண்டுகளில் கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டும். பி.பி.எப். கணிக்கு தொடங்கிய பின், மூன்றாவது நிதி ஆண்டிலிருந்து ஆறாவது நிதி ஆண்டு முடிய இந்த வகையில் கடன் பெறலாம். ஒரு நிதி ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்த வழியில் கடன் தரப்படும்.