பொதுவாகப் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய மாதத்தின் வர்த்தகத்தை பொருத்து தான் பட்ஜெட் அறிக்கைக்குப் பின் நிறுவனப் பங்குகளின் வளர்ச்சியைக் கணிக்க முடியும்.
2010 முதல் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய மாதம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் முதலீட்டாளர்களை மிரட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 11 வருடத்தில் பட்ஜெட் அறிவிப்புக்கு முந்தைய மாதம் 7 முறை வீழ்ச்சி அடைந்துள்ளது, 4 முறை மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் 2010, 2011, 2013, 2014, 2015, 2016 மற்றும் 2020 ஆகிய 7 வருடம் பட்ஜெட் அறிவிப்புக்கு முந்தைய மாதம் சரிவைச் சந்தித்துள்ளது.
ஆனால் 2021 மிகவும் வித்தியாசமானது, கொரோனா தொற்றால் இந்திய பொருளாதாரம் மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவிலான சரிவை எதிர்கொண்டது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளில் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்கின்றனர்.
இதனால் ஜனவரி மாதத்தில் இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகளின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் சென்செக்ஸ் தொடர் வளர்ச்சியில் வரலாறு காணாத விதமாகச் சுமார் 50,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது. அந்த வகையில் 2021ல் ஜனவரி மாதத்தில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை சுமார் 4 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சுகாதாரத் துறை, கல்வி, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு, மலிவு விலை வீடுகள், பாதுகாப்புத் துறைக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கப்படும் எனக் கணிப்பு நிலவி வருகிறது. இதனால் இத்துறை மீதான முதலீடுகள் பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்குப் பின் அதிகளவிலான லாபத்தை அளிக்க வாய்ப்புகள் உண்டு.
இதேபோல் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குப் போடப்படும் நிலையில், நீண்ட காலக் கண்ணோட்டத்தில் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.