செல்வம் சேர்க்க எஸ்ஐபி என்பது ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல, சிறு சேமிப்பு என்பது, நாளை பெரும் சேமிப்பாக மாறும். இதற்கு சிறந்த திட்டம் எஸ்ஐபி ஆகும்.
இந்த திட்டத்தில் சிறு முதலீட்டாளர்கள் தான் சேமிக்க வேண்டுன் என்பது இல்லை. பெரிய அளவிலான முதலீட்டாளர்களும் சேமிக்கலாம். ஆக மொத்தத்தில் யார் வேண்டுமானாலும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப சேமிக்கலாம்.
அதோடு மியூச்சுவல் பண்ட் சேமிப்பானது சிக்கலானது என நினைப்பவர்கள் கூட, இவற்றில் முதலீடு செய்வதற்கான எளிய வழியாக எஸ்ஐபி கருதப்படுகிறது.
எஸ்ஐபி (sip) என்றால் என்ன?
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பதனையே சுருக்கமாக, எஸ்ஐபி என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என, குறிப்பிட்ட காலக்கெடுவில், தொடர்ந்து முதலீடு செய்ய இந்த முறை வழிவகுக்கிறது. மியூச்சுவல் பண்ட்கள் யூனிட்களாக வாங்கப்படுவதால், ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற அளவு யூனிட்கள் வாங்கப்படும்.
சீரான முதலீடு
எஸ்ஐபி முதலீடு என்பது ஒரு சீரான முதலீட்டிற்கு வழிவகுக்கும். பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் குறித்தெல்லாம் பதற்றம் அடையாமல் சீரான முதலீட்டுக்கு வழிவகுக்கிறது. சாதாரணமாக நாம் மாதாமாதம் முதலீடு செய்வதாக இருந்தால், அதற்கான நேரம் கிடைக்காமல் தள்ளிப்போடும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும் சந்தை நிலைக்கு ஏற்பவும் தள்ளிப் போடலாம். ஆனால் எஸ்ஐபி முறையில் தொடர்ந்து சீராக முதலீடு செய்து கொண்டிருக்கலாம்.
சிறிய அளவில் முதலீடு செய்யலாம்?
நீங்கள் குறைந்தபட்சம் மாத 500 ரூபாயை கூட இந்த எஸ்ஐபி-யில் முதலீடு செய்யலாம். உங்கள் நிலவரத்திற்கு ஏற்ப உங்களது முதலீட்டினை அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. அதோடு ஒரே நேரத்தில் ஒரு திட்டத்தில் அல்லது வேறு எஸ்ஐபி-யை தொடங்கலாம். ஆக இப்படியும் உங்கள் முதலீட்டினை நீங்கள் அதிகரிக்கலாம்.
ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப பலன்
எஸ்ஐபி முதலீட்டின் மிகப்பெரிய சாதகம், சராசரி பலன் மூலம், நிறைந்த பலனை பெறுவதாகும். அதாவது, இந்த முறையில் ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற யூனிட்கள் வாங்கப்படும். சந்தை ஏற்றத்தில் இருந்தால், குறைவான யூனிட்களும், இறக்கத்தில் இருந்தால், அதிக யூனிட்களும் கிடைக்கும். மொத்தத்தில் சராசரியாக பார்க்கும் போது, சற்று லாபம் உள்ளதாக இருக்கும். இதனையே நீண்டகால முதலீடாக செய்யும் போது, கூட்டு வட்டி முறையின் பலனையும் பெறலாம்.
எளிதாக தொடங்கலாம்
இன்று பல நிறுவனங்கள் இந்த அசெட் மேனேஜ்மென்ட் வேலையை செய்கின்றன. ஆன்லைனிலும் நீங்கள் உங்களுக்கு போதுமான அனுபவம் இருந்தால் தொடங்கிக் கொள்ளலாம். அதோடு உங்களது திட்டங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். அதோடு பங்கு சந்தையை விரும்பாதவர்களுக்கு இது எளிதான திட்டமாக பார்க்கப்படுகிறது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம். இலக்கை அடைந்தவுடன் உங்களது முதலீட்டினை எடுத்துக் கொள்ளலாம்.