ஆர்பிஐ வங்கி, மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும். அப்படி கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டிக்குப் பெயர் தான் ரெப்போ ரேட்.
வங்கிகளுக்கு குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்தால், வங்கிகள் குறைந்த வட்டிக்கு மற்ற வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கும் என்பது தான் பொதுவான கணக்கு.
இந்த முறை ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை ஆர்பிஐ மேற்கொண்டு குறைக்கவில்லை. அதே 4 சதவிகிதமாக தொடர்கிறது. இந்த முறை ஆர்பிஐ ரெப்போ ரேட்டை குறைக்காததற்கு சில காரணங்களை சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அனலிஸ்ட்கள். அதில் முகியமான 3 விஷயங்களை இங்கு பார்ப்போம்.
எவ்வளவு குறைத்து இருக்கிறார்கள்
கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி & பொருளாதார நெருக்கடி காலத்தில், ஜூலை 2008 காலகட்டத்தில் 9.0 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் ஏப்ரல் 2009 காலகட்டத்தில் 4.75 சதவிகிதமாக குறைத்தார்கள். அதே போல கடந்த 2014-ம் ஆண்டு 8.0 %மாக இருந்த ரெப்போ ரேட் வட்டி, இன்று 2009-ஐ விட குறைவாக 4.0 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறார்கள்.
1. வட்டி வருமானம்
பொதுவாக, நாம் முதலீடு செய்யும் பணம், பணவீக்கத்தை தாண்டி வருமானத்தை ஈட்டினால் தான் அது பலன் கொடுக்கும். தற்போது எஸ்பிஐ வங்கியின் 1 ஆண்டுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் 5.1 %-மாக சரிந்து இருக்கிறது. ஆனால் ஜூன் 2020-க்கான பணவீக்கம் 6.09 %-மாக இருக்கிறது.
சரியக் கூடாது
மேற்கொண்டு ஆர்பிஐ தன் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தைக் குறைத்தால், அது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களையும் பாதிக்கும். இதனால் பலரும் வங்கியில் இருக்கும் பணத்தை வெளியே எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஆர்பிஐ இந்த முறை தன் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்பு குறைவு தான் என்றார்கள். சொன்னது போலவே நடந்து இருக்கிறது.
2. பணவீக்கம்
ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைத்தால் மேற்கொண்டு பணவீக்கம் உயர வாய்ப்பு இருக்கிறது. எனவே, தற்போது இந்திய பொருளாதாரம் இருக்கும், இக்கட்டான சூழலில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியாவது ஆர்பிஐ தன் வட்டி விகிதங்களை மேற்கொண்டு குறைக்கமாட்டார்கள் என கணித்துச் சொல்லி இருதார்கள். அதே போல தற்போது ஆர்பிஐ தன் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களில் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை.
3. டிமாண்டில் தாக்கம் இருக்காது
வட்டி விகிதங்களால், பொருளாதாரத்தில் டிமாண்டை பெரிய அளவில் அதிகரிக்க வைக்க முடியாது. கொரோனா பிரச்சனை வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரண்டு தரப்பினர்களையும் பாதித்துக் கொண்டு இருக்கிறது. எனவே ஆர்பிஐயின் மானிட்டரி பாலிசி கமிட்டி, இந்த ஆகஸ்ட் 2020-ல் எந்த வட்டி விகித குறைப்பையும் செய்யாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள்.