கார் லோன், ஹோம் லோன், எஜுகேஷன் லோன்.. இப்படி ஏதாவது ஒரு லோனை வாங்கிவிட்டு ஈஎம்ஐ முடிவதற்கு முன்பே அடைப்பது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயம் தான். இதனால் வட்டி வெகுவாக குறையும். மாதா மாதம் ஈஎம்ஐ செலுத்தும் பணம் மிச்சமாகும். அதைவிட கடன் இல்லாத வாழ்க்கை மன நிம்மதியை கொடுக்கும். ஆனால் கடனை முன்கூட்டியே அடைப்பதால் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்குமா? என்பதைத்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் பெறவிருப்பவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு 3 எழுத்து நம்பர். இந்த நம்பரை வைத்து தான் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? உங்களால் அதை கட்ட முடியுமா? என்பதை எல்லாம் தீர்மானிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனை சரியாக செலுத்தி இருக்கிறீர்களா?, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கிரெடிட் லிமிட்டை தாண்டி பயன்படுத்தி இருக்கிறீர்களா?, உங்கள் கடன் காலம் முழுவதும் சீராக ஈஎம்ஐ செலுத்தி இருக்கிறீர்களா? என்பதை எல்லாம் வைத்து தான் இந்த கிரெடிட் ஸ்கோர் தீர்மானிக்கப்படும்.
நீண்ட கால அடிப்படையில் நீங்கள் வாங்கிய கடனை பொறுப்புடன் செலுத்தியிருந்தால் ஸ்கோர் சற்று அதிகமாக இருக்கும். 300 முதல் 900-திற்குள் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும். உங்களுடைய ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால் பிரச்சனை இல்லை. அதற்கும் கீழ் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு பார்த்துதான் கடன் வழங்கும். எனவே ஒரே நாளில் நீங்கள் கடன் தவணையை முழுவதுமாக செலுத்தினாலும் கிரெடிட் ஸ்கோர் ஏறப்போவதுமில்லை இறங்கப் போவதுமில்லை.
இதே விதிமுறைதான் கிட்டத்தட்ட எல்லா கடன்களுக்கும். வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற சில கடன்களை முன்கூட்டியே அடைத்து விடுவதால் உடனடியாக கிரெடிட் ஸ்கோர் ஏறிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். நீங்கள் செலுத்தும் தவணையே உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை தீர்மானிக்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க சில எளிய வழிகளைப் பார்ப்போம்.
உரிய நேரத்தில் ஈஎம்ஐ செலுத்துதல்: எந்தக் கடனாக இருந்தாலும் சரி கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன் என எதை வாங்கி இருந்தாலும் அதை உரிய ஈஎம்ஐ தேதியில் செலுத்திப் பழகுங்கள்.
கிரெடிட் கார்டு தவணை: கிரெடிட் கார்டு பில் செலுத்தும் போது மினிமம் டியூவை மட்டும் செலுத்தாமல் முழுமையாக செலுத்துவது நல்லது. இது கிரெடிட் ஸ்கோருக்கு மட்டுமின்றி உங்களுடைய வட்டி சுமையையும் குறைக்க உதவும்.
இரண்டு மூன்று கடன்களுக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பது: ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கடன்களுக்கு விண்ணப்பிப்பதாலும் கிரெடிட் ஸ்கோர் குறையும்.
அறிக்கையை சரி பாருங்கள்: சமீபத்திய நாட்களாக சைபர் மோசடிகள் அதிக அளவில் நடப்பதால் அவ்வப்போது உங்களுடைய கிரெடிட் அறிக்கையை சரி பார்ப்பது நல்லது. ஏனெனில் யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் போது உங்களை மீளா கடன் சுமையில் தள்ளுவதற்கு வாய்ப்புள்ளது. வங்கி அறிக்கைகள், கிரெடிட் கார்டு பேமெண்ட் அறிக்கைகள் போன்றவற்றில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்திருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications
