பெண்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக போஸ்ட் ஆபீஸ்களில் எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஆண்கள் மட்டுமின்றி இந்த திட்டங்களில் பெண்களும் சேர்ந்து பலனடையலாம். பெரும்பாலானோர் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் பங்குச்சந்தை திட்டங்களைப் போல இதில் எந்த அபாயமும் இன்றி சேமிக்கலாம். அரசு வழங்கும் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீட்டுக்கு 100% உத்தரவாத வருமானம் கிடைப்பதோடு கூட்டு வட்டியின் மூலம் உங்கள் வருமானம் பன்மடங்காக அதிகரிக்கும். இந்த பதிவில் பெண்கள் முதலீடு செய்யக்கூடிய 5 சேமிப்பு திட்டங்களை பற்றி பார்ப்போம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொல்லப்படுகிற இந்த திட்டத்திற்கு அறிமுகம் தேவையில்லை. பெரும்பாலான பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேமித்து வருகின்றனர். 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

குழந்தைகளின் உயர்கல்வி, திருமண செலவுகள் போன்றவற்றுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு தற்போது 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரவு வைக்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் போதுமானது. அதன் பிறகு மீதமிருக்கும் 6 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டியின் மூலம் முதலீடு செய்யாமலேயே வருமானம் கிடைக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி: இதுவும் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. தேவைப்பட்டால் பிபிஎஃப் திட்டத்திற்கு எதிராக கடன் பெற முடியும். அவசர காலத்தில் பகுதியளவு தொகையைத் திரும்பப் பெறும் வசதியும் வழங்கப்படும். PPF திட்டத்திற்கு தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் லாக்கின் காலம் 15 ஆண்டுகள். ஒரு நிதியாண்டுக்கு குறைந்தது ரூ.500 தொடங்கி ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவும் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு திட்டம் ஆகும்.
மாதாந்திர வருமானத் திட்டம்: இந்த திட்டத்திற்கு தற்போது 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மாதாந்திர வருமானம் பெற நினைக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஒரே ஒருமுறை முதலீடு செய்து விட்டு அந்தத் தொகைக்கான வட்டியை மாதா மாதம் பெற்றுக் கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ரூ. 1,000 தொடங்கி ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் வட்டி வருமானமாக ஆண்டுக்கு ரூ.66,600 கிடைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.5,550 வருமானமாகப் பெறலாம்.
ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம்: இந்த திட்டத்தில் நீண்ட காலமாகவே பெண்கள் முதலீடு செய்து வருகின்றனர். மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள் மாதா மாதம் சிறு தொகையை வரவு வைக்கலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப ரூ.100 தொடங்கி நூறின் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்திற்கு தற்போது 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதற்கு 5 ஆண்டுகள் லாக்கின் காலம் உள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் அதன் பிறகு வட்டியையும், அசலையும் சேர்த்துப் பெற்றுக் கொள்ளலாம்.
ஃபிக்சட் டெபாசிட்: இது ஒரு மொத்த முதலீட்டு திட்டம், போஸ்ட் ஆபீஸ்களிலும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு என உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். கையில் மொத்தமாக பணத்தை வைத்துக்கொண்டு அரசு ஆதரவு பெற்ற திட்டங்களில் சேமிக்க விரும்பும் பெண்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தலாம். FD திட்டத்திற்கு 1,000 ரூபாய் முதல் சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் வழங்கப்படும்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதற்கு கூட்டு வட்டி மூலம் வருமானம் பெறலாம். இதனால் நீங்கள் போடும் முதலீடு பன்மடங்காக அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications
