இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்குவது பெரிதல்ல? ஆனால் அந்த கடனை எங்கு வாங்குகிறோம்? அதற்கு எவ்வளவு வட்டி? வேறு என்ன சலுகை உள்ளது, செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு? எங்கு வட்டி குறைவாக இருக்கும் என பலவற்றையும் அலசி ஆராய வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு தனி நபர் கடன் என்றாலே வட்டி விகிதம் குறைந்தபட்சம் 8%. அதற்கு செயல்பாட்டுக் கட்டணம், மற்ற கட்டணங்கள் என அனைத்தும் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி? எங்கு கிடைக்கும்?
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது 1% வட்டி விகிதத்தில் கிடைக்கும் குறுகிய கால கடன் பற்றித் தான்.
குறைவான வட்டியில் கடன்
பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎஃப் திட்டம் வைத்திருப்பவர்கள் தான் இந்த திட்டத்தில் கடன் வாங்க முடியும். இது ஒரு சிறந்த முதலீட்டு திட்டம் மட்டும் அல்ல, சேமிப்பு கருவியும் கூட, எல்லாவற்றிற்றுக்கும் மேலாக அவசர காலகட்டத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ள உதவும் சிறந்த ஆப்சன்.
எவ்வளவு வட்டி?
இந்த பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தொடங்கப்பட்டு 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரையில் இந்த கணக்கிக்கு எதிராக கடன் பெற்றுக் கொள்ளலாம். வட்டி விகிதம் என்பது வெறும் 1% மட்டுமே. உண்மையில் இது மிக நல்ல விஷயமே. இது ஒரு குறுகிய கால கடனாகும். அதோடு மற்ற தனி நபர் கடன், அடமானக் கடன், நகைக் கடன் இப்படி பல கடன்களுடன் ஒப்பிடும்போது வட்டி என்பது மிக மிக மலிவானது.
அவசர தேவைக்கு மட்டுமே
அதிலும் கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் கடன் கிடைப்பதே பெரிய விஷயம். அதிலும் 1% வட்டிக்கு கிடைப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். ஆக அப்படி பார்க்கையில் இது உண்மையில் அவசர தேவைக்கு மிக பயனுள்ள ஒரு விஷயமே. எனினும் இதனை மிக நெருக்கடியான அவசர தேவைக்கு பயன்படுத்துவதே சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிபுணர்களின் கருத்து
இது குறித்து செபியின் பதிவு செய்யப்பட்ட வரி மற்றும் முதலீட்டு துறையில் நிபுணரான மணிகரன் சிங்கால், நடைமுறையில் உள்ள பிற சில்லறை வங்கி கடனை, PPF வைப்புத் தொகைக்கு எதிரான கடனுடன் ஒப்பிட்டு கூறுகையில், PPF வைப்பு தொகைக்கு எதிரான கடன் நிச்சயமாக தனிநபர் கடன், நகைக்கடன் அல்லது வங்கி FD-க்கு எதிரான கடன் போன்ற கடன்களை விட மிகவும் மலிவானது என்கிறார்.
இது தான் புத்திசாலித்தனம்
PPF வழங்கும் கடன் என்பது ஒருவரது வைப்புத் தொகை எவ்வளவு என்பதை பொறுத்தது. ஆனால் மற்ற வங்கிக் கடன்கள் என்பது ஒருவரது மாத வருமானத்திற்கு உட்பட்டது. ஆக ஒருவருக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போதும், தேவைப்படும் தொகையை PPF கணக்கு மூலம் கடன் மூலம் பெற முடியும் என்றால், அவர்கள் அதனை அந்த வாய்ப்பை பயன்படுத்துவது மிக புத்திசாலித்தனம் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பெறலாம்
எனினும் PPF-க்கு எதிரான கடன் பிபிஎஃப் கணக்கின் மூன்றாம் ஆண்டு முதல் தான் கிடைக்கத் தொடங்குகிறது. அதோடு இந்தக் கடனை மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை மட்டுமே பெற முடியும். ஏனெனில் பிபிஎஃப் கணக்கு காலம் ஆறு ஆண்டு காலத்துக்கு மேல் ஆகி விட்டால், ஒருவர் பிபிஎப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வளவு கிடைக்கும்?
அதெல்லாம் சரி எவ்வளாவு தொகை கடனாக பெறலாம். கடனுக்கு விண்ணப்பிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய மற்றும் இரண்டாம் ஆண்டின் இறுதியில், உங்கள் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் இருந்து அதிகபட்சம் 25% வரை கடன் தொகையைப் பெறலாம்.
ஒருவர் 2021 ஏப்ரலில் (2021-2022) நிதியாண்டில்) கடன் பெற விண்ணப்பித்தால், மார்ச் 2021 இறுதியில் இருந்த தொகையில் 25% கடனாக பெற்றுக் கொள்ள முடியும்.