வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய ஆசை சொந்த வீட்டுக்கு குடியேற வேண்டும் என்பதுதான். ஆனால் விலைவாசி அதற்கு ஏற்றவாறு இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட செங்கல், ஜல்லி விலையும் தற்போது விற்பனை செய்யப்படும் விலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். விடை உங்களுக்கே கிடைத்துவிடும். அதிலும் சிலருக்கு மிகக் குறைந்த மாத சம்பளமே கிடைக்கிறது.
பெற்றோர் சேர்த்து வைத்த சொத்து அல்லது பாட்டி தாத்தா சேர்த்து வைத்த சொத்து இருந்தால் அதை வைத்து வீடு வாங்கலாம். அப்படி இல்லாதவர்கள் ஹோம் லோனையே பெரிதும் நம்பி இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிலருக்கு மிக குறைந்த மாத சம்பளமே கிடைக்கிறது. இதனால் ஹோம் லோன் பெற்று வீடு வாங்குவதிலும் பிரச்சனை ஏற்படுகிறது.
ஏனெனில் வங்கிகள் ஒருவரின் சம்பளம் எவ்வளவு?, அவரால் கடனை சரிவர செலுத்த முடியுமா? என்பதை எல்லாம் பார்த்து தான் ஹோம் லோன் வழங்கும். ஆனால் குறைவான சம்பளம் இருந்தால் கடன் கிடைக்காது என்று அர்த்தமில்லை. ஒரு சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் குறைந்த சம்பளத்திலும் ஹோம் லோன் பெற முடியும்.

இணை விண்ணப்பதாரரை சேர்த்துக் கொண்டு விண்ணப்பித்தல்: உங்களுடைய சம்பளம் குறைவாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் யாரவது பணியில் இருந்தால் அவர்களை சேர்த்துக் கொண்டு ஹோம் லோன் பெற விண்ணப்பிக்கலாம். உதாரணமாக உங்கள் மனைவி அல்லது உங்கள் கணவரை சேர்த்துக் கொண்டு ஹோம் லோன் பெற முயற்சிக்கலாம். 2 நபர்கள் சேர்ந்து விண்ணப்பிக்கும் பட்சத்தில், வங்கி உங்கள் இருவரின் சம்பளத்தையும் கணக்கிட்டு அதற்கு ஏற்ப லோன் வழங்கும்.
கடன் காலம்: குறைவாக சம்பளம் பெறும் ஒருவர் கூட்டு விண்ணப்பதாரரை வைத்துக்கொண்டு லோனை வாங்கி விடலாம். ஆனால் மாதா மாதம் EMI செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். இத்தகைய சூழலில் கடன் காலத்தை நீட்டிப்பது தான் சிறந்தது. ஆனால் அதற்கு வட்டி சற்று கூடுதலாக இருக்கும். லோன் தொகை அதிகமாகும் போது நீங்கள் மாதம் கட்ட வேண்டிய ஈஎம்ஐ தொகை அதிகமாகும். வங்கி அதற்கு ஏற்ப வட்டி வசூலித்துக் கொண்டு ஈஎம்ஐ தொகையை குறைத்து வழங்கும். இதனால் உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப ஈஎம்ஐ செலுத்தி கடனை சுலபமாக அடைக்கலாம்.
கூடுதல் வருமானம் தரும் வழிகளைக் கண்டுபிடியுங்கள்: லோன் காலத்தை அதிகரித்தால் அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். ஆனாலும் மாத சம்பளக்காரர்களுக்கு இது கடனை அடைக்க ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. அதற்காக கடனை அப்படியே விட்டுவிடக்கூடாது. சீக்கிரம் அடைக்க முயற்சி செய்யலாம். அதற்கு பார்ட் டைம் ஜாப் அல்லது பிற வழிகளில் வருமானம் ஈட்ட முயற்சி செய்ய வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு மாதமும் அசலில் வரவு வைக்கலாம்.
சிபில் ஸ்கோரை பராமரிக்கவும்: எந்த ஒரு கடனாக இருந்தாலும் சரி சிபில் ஸ்கோர் முக்கியம். இந்த ஒரு ஸ்கோரை பார்த்த பிறகு தான் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும். சிபில் ஸ்கோரை முடிந்த அளவுக்கு 750-க்கு மேல் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். குறைந்த சம்பளம் இருந்தாலும் நல்ல ஸ்கோர் இருந்தால் நீங்கள் பொறுப்பானவர் என வங்கிகள் கருதும். மேலும் உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முன்வரும்.
அதிக டவுன் பேமெண்ட் செலுத்துங்கள்: எந்த ஒரு சொத்தை வாங்கினாலும் அதற்கு முன்பணம் செலுத்த வேண்டி வரும். செலுத்தும் போது 10, 20% செலுத்தாமல் 30 முதல் 50 சதவீதம் செலுத்த முயற்சி செய்யுங்கள். அதற்கு உங்களிடம் இருக்கும் சேமிப்பு, போனஸ், PF போன்றவற்றை பயன்படுத்தலாம். இப்படி செய்தால் நீங்கள் வங்கிகளில் வாங்கும் லோன் தொகை குறையும். லோன் தொகை குறைவாக இருந்தால்.. குறைந்த சம்பளக்காரர்களுக்கு உடனே அப்ரூவல் கிடைக்கும்.
சிலர் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை மட்டுமே லோன் பெற நம்பி இருப்பார்கள். அதை விடுத்து சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களிலும் லோன் கிடைக்கிறது. ஆனால் பொது துறை வங்கிகளை காட்டிலும் இங்கு வழங்கப்படும் லோன்களுக்கு வட்டி அதிகம். இருந்தாலும் குறைந்த சம்பளக்காரர்கள் இங்கு எளிதில் லோன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
