பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் தங்கம் எந்த அளவுக்கு உயரும் என்பதை தெரிவித்த அவர், வெள்ளி (சில்வர்) விலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது வெள்ளி விலை பெரிதும் சரிந்து வருவதாகவும், இன்னும் குறையும் என்றும், வெள்ளியை முதலீடாக பார்க்காமல் ஃபேஷன் அல்லது அலங்கார பொருளாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார். இது வெள்ளி முதலீட்டாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தங்கத்தின் விலை உயர்வில் அதிர்ந்து போய், வெள்ளியில் பணத்தை கொட்டியவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வெள்ளி விலை தற்போது எவ்வளவு சரிந்துள்ளது?
ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், வெள்ளி விலை ஏற்கனவே 10 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. டாலர் அடிப்படையில் பார்க்கும்போது 70 டாலருக்கு கீழே சென்றுள்ளது. இந்தியாவில் ரீடைல் சந்தையில் வெள்ளி விலை ரூ.2.2 லட்சம் முதல் ரூ.2.4 லட்சம் வரை உள்ளது.
முன்பு ரூ.4 லட்சம் அளவில் இருந்த விலை இப்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை சரிந்துள்ளது என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறினார். இந்த சரிவு தொடரும் என்றும், மேலும் குறையும் என்றும் அவர் உறுதியாகக் கூறுகிறார்.
வெள்ளியை தொட வேண்டாம்
வெள்ளி விலை பெரிதும் சரிந்து வருவதால், இப்போது வாங்குவது ஆபத்தானது என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கிறார். "வெள்ளி தொடாதீர்கள்" என்று பலமுறை தான் சொல்லி வருவதாகவும், இனியும் வெள்ளி விலை மீதான சரிவு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளி முதலீட்டுக்கு பாதுகாப்பானது அல்ல என்றும், பெரிய அளவு வீழ்ச்சி ஏற்படும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
டைட்டன் நிறுவனத்தின் வெள்ளி விற்பனை
டைட்டன் ஜுவல்லரி நிறுவனம் வெள்ளி நகைகளை தீவிரமாக விற்று வருவதை சுட்டிக்காட்டி, இது நிறுவனத்தின் தங்க நகை விற்பனை குறைந்ததால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.
டைட்டன் தற்போது 22 கேரட் நகைகளை தாண்டி 18 காரட், 16 காரட், 11 காரட் தங்க நகைகளுக்கு அதிகளவில் முக்கியதுவம் கொடுத்து வரும் வேளையில் வெள்ளி நகைகளை ஃபேஷன் பொருளாக மாற்றி விற்கிறது என்று தெரிவித்தார்.
"காசு இல்லை என்றால் வெள்ளி வாங்கலாம், ஆனால் முதலீடாக இல்லை" என்று தெளிவுபடுத்தினார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். டைட்டன் நிறுவனம் 30 சதவீத விற்பனை வெள்ளி மூலம் வருகிறது என்று கூறுவதை அவர் குறிப்பிடுகிறார்.
வெள்ளி எப்போதும் தங்கத்தின் மாற்றாக இருக்காது!
வெள்ளி ஒருபோதும் தங்கத்திற்கு மாற்றாக இருக்காது என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் உறுதியாகக் கூறுகிறார். இப்போது இல்லை, 10 ஆண்டுகளுக்கு பிறகும் இல்லை, 100 ஆண்டுகளுக்கு பிறகும் இப்படி நடக்காது என அடித்து கூறுகிறார்.
வெள்ளியை அலங்கார பொருளாக (fashion metal) மட்டுமே வைத்திருக்கலாம் என்று சொல்லும் ஆனந்த் ஸ்ரீனிவாசன். வெள்ளி எப்போது தங்கத்திற்கு இணையாக மதிக்கப்படும் என்றால் வங்கிகளில் வெள்ளியை கொடுத்து அதன் மதிப்பில் 80 சதவீதம் கடன் பெற முடியும் நாளில் தான், வெள்ளி உண்மையான பணமாகவும், முதலீடாகவும் இருக்கும். அதுவரையில் வெள்ளி வெறும் ஃபேஷன் மெட்டலாக மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆனந்த் ஸ்ரீனிவாசனின் இந்த எச்சரிக்கை வெள்ளி முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது. தற்போது வெள்ளி விலை சரிந்து வரும் நிலையில், முதலீட்டுக்கு பதிலாக அலங்கார பயன்பாட்டுக்கு மட்டுமே வாங்க வேண்டும் என்ற அவரது அறிவுரை சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெள்ளி விலை மேலும் சரியும் என்ற அவரது கணிப்பு, தங்கத்தைப் போல வெள்ளியும் முதலீட்டுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.


Click it and Unblock the Notifications