அமெரிக்கா சீனா இடையே மிகப்பெரிய வர்த்தகப் போர் நடந்து வருவது எல்லோருக்கும் தெரியும். இந்தப் பிரச்சனையே என்னவாகும் எனத் தெரியாமல் சீனா கலக்கத்தில் இருக்கிறது.
இப்படி இருக்கும் வேளையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்குத் துணை நிற்கிறது எனக் கருதி அமெரிக்க அரச பல ஆண்டுகளாக அளித்து வரும் நிதி உதவிகளை டிரம்ப் அரசு சில வாரங்களுக்கு முன் தடை விதித்து. இப்படிப்பட்ட பாகிஸ்தானில் சீனா 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் இந்த முதலீடு அமெரிக்காவை மட்டுமல்ல இந்தியாவையும் பாதித்துள்ளது.
Economic Corridor திட்டம்
சீனா - பாகிஸ்தான் இடையே வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மேம்பட வேண்டும் எனப் பாகிஸ்தான் எல்லையில் சீன முதலீட்டில் China-Pakistan Economic Corridor திட்டம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது.
இதோடு சீனா பாகிஸ்தான் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் 2வது பகுதி வருகிற அக்டோபர் மாதம் இறுதி முடிவை அடைய உள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் பாகிஸ்தான் வியாபாரிகள் சீனாவிற்கு 0% வரியுடன் விவசாயப் பொருட்கள், கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய முடியும்.
ஏற்றுமதி
இத்திட்டங்களின் மூலம் பாகிஸ்தான் சீனாவிற்கு 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யமுடியும். இதனால் இந்நாட்டின் நாணயத்தின் மதிப்பும், வர்த்தகச் சந்தையும் பெரிய அளவில் மேம்படும்.
இது ஒருபக்கம் இருந்தாலும் பாகிஸ்தானில் முதலீடு செய்யப்படும் பணம் அனைத்தும் தீவிரவாதத்திற்குத் தான் பயன்படுத்தப்படுகிறது எனப் பல நாடுகளில் கருந்து நிலவுகிறது.
சீனாவின் புதிய முதலீடு..
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், பாகிஸ்தான் சீனாவின் அம்பாசிட்டர் யாவ் ஜிங் பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஒரு முக்கியமான கூட்டத்தில் இஸ்லாமாபாத் வளர்ச்சி திட்டங்களுக்காக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
பெண்கள்
சீனா முதலீடு செய்யும் 1 பில்லியன் டாலர் வளர்ச்சி திட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என யாவ் ஜிங் தெரிவித்துள்ளார்.
இதோடு பாகிஸ்தான் நாட்டின் பெண் தொழிலதிபர்களைச் சீனாவிற்கு அழைத்துச் சென்று பல தொழிற்துறை கண்காட்சிக்கு அழைத்துச் சென்றும், புதிய வர்த்தக வாய்ப்புகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் யாவ் ஜிங்.
இந்தியா - அமெரிக்கா
சீனாவின் இந்த முதலீடு தொழிற்துறை மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக மட்டுமே இருந்தாலும், சீனா- பாகிஸ்தான் இடையிலான நட்பு இதன் மூலம் வலிமை அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இது நிச்சயம் இந்திய எல்லைப் பகுதிகளுக்கு ஆபத்து தான்.
அதேபோல் அமெரிக்கா இதை எதிர்ப்பாக எடுத்துக்கொள்ள அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்கப் பாகிஸ்தானுக்கு நிதியுதவியை ரத்து செய்துள்ள இந்த நேரத்தில் சீனாவின் உதவி டிரம்ப் அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஒன்று. இதனால் அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் வலுவடையவும் வாய்ப்புகள் உள்ளது.