உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஒன்று. பில் கேட்ஸின் இந்த நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் 2019-ல் ஒரு புதிய சோதனையைச் செய்து இருக்கிறார்கள்.
இந்த சோதனைக்கு ஜப்பான் நாட்டில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தை தேர்ந்து எடுத்து, சோதனைகளைச் செய்து இருக்கிறார்கள்.
அது தான் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை என்கிற புதிய வேலை சூழல் கலாச்சார சோதனை. பொதுவாகவே ஜப்பானில் பயங்கரமாக வேலை பார்ப்பார்கள் என்பதை தனியாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் உயிர் போகும் அளவுக்கு என்கிறது செய்திகள்.
அதிக வேலை
கடந்த பல ஆண்டுகளாக, அதிக வேலைப் பளு மற்றும் நீண்ட நேரம் வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் ஜப்பானியர்கள் தற்கொளை செய்து கொள்வது அல்லது வேலை பளு காரனமாக இறப்பது அதிகரித்து இருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி வேலைப் பளுவினால் இறந்து போவதை ‘கரோஷி' என்கிறார்கள் ஜப்பானியர்கள்.
கரோஷி தவிர்ப்பு
இப்படி ஜப்பானிய மக்கள் வேலை அழுத்தத்தினால் இறப்பதைக் குறைக்க அரசு பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதோடு கரோஷியைத் தவிர்க்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல வேண்டுகோள்களை வைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பாகமாகத் தான், மைக்ரோசாஃப்ட் ஜப்பான் நிறுவனம், இந்த நான்கு நாட்கள் வேலை முறையைச் சோதனை அடிப்படையில் செயல்படுத்திப் பார்த்து இருக்கிறார்களாம்.
சோதனை
கடந்த ஆகஸ்ட் 2019- மாதம் முழுக்க, ஜப்பானில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தன்னுடைய 2,300 ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை முழுவதும் விடுப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதாவது வார விடுமுறை நாள் வெள்ளிக்கிழமையே தொடங்கி விடும். அதோடு கூட்டங்களையும் (மீட்டிங்) 5 பேருக்கு மேல் கூட்டக் கூடாது. அதே போல 30 நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆன்லைன்
கூட்டங்களைக் கூட்ட கூடுமான வரை முகம் பார்த்துப் பேசுவதை குறைத்துக் கொண்டு, ஆன்லைன் சேட்டிங்களைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் இ மெயில்களை விடுத்து மற்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தச் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா..? பிரமாதம் நீங்களே பாருங்கள்
லாபம் எப்படி
ஒரு நிறுவனத்துக்கு எப்படி லாபம் வரும். மொத்த வருவாய் - மொத்த செலவுகள் = நிகர லாபம். உதாரணமாக மொத்த வருவாய் ரூ.100 - மொத்த செலவுகள் ரூ.85 = நிகர லாபம் ரூ.15. இப்போது இந்த நிகர லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், ஒன்று வருவாயை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவைக் குறைக்க வேண்டும். மைக்ரோசாஃப்டின் சோதனையில் இரண்டுமே நடந்து இருக்கிறது.
பலன் 1
மேலே சொன்ன படி வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை, ஆன்லைனில் மீட்டிங் போன்ற புதிய முயற்சிகளால், சராசரியாக ஒரு ஊழியரால் ஆக வேண்டிய வியாபாரம் 40 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. விற்பனை அதிகரித்து இருப்பதால் ஒரு பக்கம் வருவாய் அதிகரித்து இருக்கிறது. வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே விற்பனை என்றால் ஜாலி தான்.
பலன் 2
அதோடு, ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்தால் அவர்கள் பயன்படுத்தும் மின்சாதன பொருட்களுக்கும் ஆகும் மின்சார செலவுகள் மட்டும் சுமார் 25 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். அதோடு மொத்த காகித பயன்பாட்டில் 50 சதவிகித காகித பயன்பாடு குறைந்து இருக்கிறதாம். ஆக மறு பக்கம் செலவும் குறைந்து இருக்கிறது.
இரண்டாவது முயற்சி
வரும் குளிர் காலத்திலும் இதே போல மற்றொரு முறை இந்த நான்கு நாள் வேலை சோதனையைச் செய்யப் போகிறார்களாம். இந்த முறை ஊழியர்கள் இதுவரை எடுக்காமல் வைத்திருக்கும் விடுப்புகளை பயன்படுத்தச் சொல்லி இருக்கிறார்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர்கள். ஹிம்ம்ம்... நமக்கு இப்படி வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை இருந்தால் பிரமாதமாக இருக்குமே..! கிடைக்குமா..?