ஆப்கானிஸ்தான், இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்த பெயரை கேட்டு சற்று அதிர்ந்து தான் போயுள்ளன. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்த ஒரு நாடு. அப்பாவி மக்கள் பலரும் அவதிப்படுவதையும், கண்ணீர் விட்டு கதறுவதையும் மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பார்க்க முடிகிறது.
இப்படி பலவற்றிலும் பலவீனமான நிலையில் உள்ள ஆப்கானிஸ்தானை, ஏற்கனவே கொரோனா, நிதி நெருக்கடி, பணவீக்கம், வேலையின்மை, வருவாயின்மை, வறுமை என வாட்டி வதைத்து வருகின்றது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் படி, சர்வதேச அளவில் 213வது இடத்தில் உள்ளது. இங்கு தலைவிரித்தாடும் வேலையின்மை விகிதம் என்பது 55%மும், இதே வறுமை விகிதமானது 70% தாண்டியுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
மோசமான நிலையில் ஆப்கானிஸ்தான்
இப்படி பொருளாதார ரீதியிலாக மிக பின் தங்கியுள்ள ஆப்கானிஸ்தானில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் என்பது வெறும் 53.25 வயது தான். அங்கு பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக் குறியான நிலையில், அதன் தற்போதைய வளர்ச்சி விகிதமும் மிக மோசமாக இருந்து வருகின்றது. இப்படி மோசமான நிலைக்கு மத்தியில் தான் ஆகஸ்ட் 15 அன்று தலைநகர் காபூலை தாலிபான்கள் கைபற்றினர்.
மீட்பு என்பது சவாலான விஷயம்
இப்படி 20 வருடங்களுக்கு பிறகு அதிரடியாக ஆப்கானிஸ்தானை கைபற்றியுள்ள தாலிபான்கள், எப்படி பொருளாதாரத்தினை மேம்படுத்த போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு புறம் ஐநா வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி, கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் சற்று மேம்பட்டிருந்தாலும், சில துறைகளில் மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை மீட்பது என்பது சவாலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அரிய பூமி
ஆப்கானிஸ்தான் அரிய வகை தனிமங்களின் இருப்பிடம், அரிய பூமி என்றெல்லாம் கூறப்படும் நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் புதைந்து கிடக்கும் தனிமங்கள், விலை உயர்ந்த கற்கள் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 3 டிரில்லியன் டாலர் இருக்கலாம் என அந்த நாட்டு அரசு மதிப்பிடுகிறது. எனினும் இதனை தோண்டி எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கேள்விக்குறியான புது முதலீடு
தாலிபான்கள் நாட்டினை கைபற்றியதையடுத்து, பல நாட்டினரும் உயிர்பிழைத்தால் போதும் என இரவோடு இரவாக, ரயிலில் பஸ்களில் செல்வதை போல, விமானத்தில் பயணம் செய்த கொடூரத்தினை செய்திகளில் பார்த்திருப்போம். பல ஆண்டுகளாக பார்த்து பார்த்து கட்டமைத்த வணிகங்களை விட்டு விட்டு வணிகர்கள் ஓடிவந்துள்ளனர். இது ஒரு புறம் எனில், ஆப்கானில் இனி புதிய முதலீடுகள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது.
ஜிடிபி கணிப்பு
இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனாவின் தாக்கம் என்பது மோசமாக உள்ளது. இதனால் கடந்த ஆண்டில் 2% சரிவினைக் கண்டது. நடப்பு ஆண்டில் 2.7% வளர்ச்சி காணலாம் என ஐஎம்எஃப் கடந்த ஜூன் மாதம் கணித்திருந்தது. இதே ஃபிட்ச் நிறுவனம் 20% வரை ஜிடிபி சரியலாம் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய வளர்ச்சி விகிதம்
கடந்த 2003 - 2012களில் ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 9.4% ஆக இருந்தது. குறிப்பாக சேவைத் துறை மற்றும் விவசாயத் துறையிலும் அப்போது நல்ல வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் அதன் பிறகு மெதுவாக சரியத் தொடங்கியது. இதே கடந்த 2015 - 2020ல் சுமார் 2.5% மட்டும் வளர்ச்சி கண்டிருந்தது.
வறுமை விகிதம்
இதே ஏசியன் டெவலப்மெண்ட் வங்கியின் கூற்றுப்படி, மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். இது கடந்த 2017ம் ஆண்டு நிலவரப்படி, 55% ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த விகிதமானது இன்னும் இனி வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
வணிக நிலவரம்
ஆப்கானிஸ்தானின் முக்கிய வணிக ஆதாரம் விவசாய ஏற்றுமதி தான். உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையின் படி, ஆப்கானிஸ்தான் கடந்த 2020ல் 783 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது. இது கடந்த 2019வுடன் ஒப்பிடும்போது 10% சரிவாகும். உலர் பழங்கள், விதைகள், மருத்துவ மூலிகைகள் என பலவற்றினையும் செய்து வருகின்றது.
ஆப்கானிஸ்தானின் முக்கிய சந்தை
ஆப்கானிஸ்தானின் முக்கிய ஏற்றுமதி சந்தை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகும். ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி வணிகம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தான் நடந்து வருகின்றது.
தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து செய்யப்படும் இறக்குமதி தடைபடுமா? மீண்டும் வழக்கம்போல இருக்குமா? இதனால் இந்தியாவில் விலைவாசி எப்படி இருக்கும். என பல கேள்விகள் உள்ளன.
ஆப்கானிஸ்தானில் பணவீக்கம்
சர்வதேச நாணய நிதியம் 2021ல் பணவீக்கம் 5.8% ஆக இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இப்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தாலிபான்கள் கைபற்றியுள்ளனர். இதனால் வர்த்தகம் தடைப்படலாம். பலவீன சந்தை மேலும் பலவீனமாகலாம். இந்த நிலையில் பணவீக்கம் 8% தாண்டி சென்றாலும் செல்லலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய வளர்ச்சி விகிதம்
கடந்த 2003 - 2012களில் ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 9.4% ஆக இருந்தது. குறிப்பாக சேவைத் துறை மற்றும் விவசாயத் துறையிலும் நல்ல வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் அதன் பிறகு மெதுவாக சரியத் தொடங்கியது. கடந்த 2015 - 2020ல் சுமார் 2.5% மட்டும் வளர்ச்சி கண்டிருந்தது.
வருவாய் சரிவு
பொருளாதாரம் சரிவினைக் கண்டுள்ள நேரத்தில் சேவைத் துறையும் சரிவினைக் கண்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பும் சுருங்கியுள்ளது. இதனால் மக்களின் வருவாய் என்பது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் கடந்த 1996ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2021ம் ஆண்டு பரவாயில்லை என தரவுகள் கூறுகின்றன.
அன்னிய செலாவணி இருப்பு
ஏனெனில் ஆப்கானிஸ்தானின் அன்னிய செலவாணி இருப்பு விகிதம் கிட்டதட்ட 7 பில்லியன் டாலர்களை நெருங்கியுள்ளது. எப்படியிருப்பினும் பொருளாதாரம் தற்போது வரையில் மோசமான நிலையிலேயே உள்ளது. இது நெருக்கடியில் உள்ள தாலிபான்களுக்கு மிகப்பெரிய சவலாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விவசாயம் அதிகம்
பொது செலவினங்களில் 75% நிதியுதவி மூலம் செய்யப்படுவதாக உலக வங்கி தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஆப்கானிஸ்தானில் சுமார் 40% தொழிலாளர்கள் விவசாயத்தில் கவனம் செலுத்துவதாகவும், மீதம் 60% மட்டுமே மற்றவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதாகவும் உலக வங்கி தரவுகள் கூறுகின்றது.
வரலாற்று சரிவில் கரன்சி
இப்படி பல இடர்பாடுகளுக்கும் மத்தியில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைபற்றியுள்ள நிலையில், அதன் வணிகம் மிக மோசமாக சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் கரன்சி மதிப்பானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது.
3 டிரில்லியன் மதிப்புள்ள கனிமங்கள்
தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில், தற்போது பயன்படுத்தப்படாத 3 டிரில்லியன் டாலர் தாதுக்கள் உள்ளதாக அந்த நாட்டு அரசு மதிப்பிடப்பட்டுள்ளது. இதே USGS அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படாத கனிமத்தின் மொத்த மதிப்பு சுமார் 1 டிரில்லியன் டாலர் இருக்கலாம் என மதிப்பிடப்படுள்ளது.
தேவை அதிகம்
மேற்கண்ட பலவும் உலகத்தின் தேவையை நிறைவு செய்யும் ஒன்றாகவும் உள்ளன. அந்த கனிம வளங்கள், எதிர்காலத்தில் புதுபிக்கதக்க எரிசக்தி தயாரிப்பில், மிக முக்கிய பங்கு வகிக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் அந்த இயற்கை வளங்களை எடுப்பது அவ்வளவு எளிதல்ல என கூறப்படுகிறது.
மிகப்பெரிய சவால்
நிதி ரீதியாக பெரும் நெருக்கடியில் உள்ள ஆப்கானிஸ்தான், இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் இன்னும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது இன்னும் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்து வந்த ஆதரவையும் தடுத்து நிறுத்தியுள்ளது. இது இன்னும் நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. மொத்தத்தில் இது தாலிபான்களுக்கு மிகப்பெரிய சவால் தான்.