சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா உலக நாடுகளில் அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருவது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த 3 நிறுவனங்களும் வர்த்தகச் சந்தையைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் படி அலிபாபா நிறுவனமும் தற்போது புதிதாக ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
பாகிஸ்தான் நிறுவனம்
அலிபாபா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி பாகிஸ்தான் நாட்டின் ஈகாமர்ஸ் நிறுவனமான டாரஸ் என்னும் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அலிபாபா தனது வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் டாரஸ் நிறுவனத்தின் வாயிலாகத் தென் ஆசிய நுகர்வோர் சந்தையைப் பெரிய அளவில் கைப்பற்றவும் அலிபாபா திட்டமிட்டுள்ளது.
லாஸ்டா
இதேபோல் தென் ஆசிய சந்தையைக் குறிவைக்கும் வகையில் லாஸ்டா நிறுவனத்தை 2016இல் கைப்பற்றிய அலிபாபா இந்நிறுவனத்தில் முதலீட்டு அளவை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது என மார்ச் மாதம் தெரிவித்துள்ளது.
லாஸ்டா நிறுவனம் தற்போது இந்தோனேஷியா, மலேசியா, பிளிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
சீனா- பாகிஸ்தான்
சீனா, பாகிஸ்தான் நட்புறவை பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் பெல்ட் மற்றும் சாலை திட்டத்திற்கு வர்த்தக வாய்ப்புகள் உருவாக்க அலிபாபாவின் டாரஸ் நிறுவன கைப்பற்றல் பெரிய அளவில் உதவும்.
ராக்கெட் இண்டர்நெட்
2012ஆம் ஆண்டு டாரஸ் துவங்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்குப் பின் இந்நிறுவனத்தை ராக்கெட் இண்டர்நெட் கைப்பற்றியது. தற்போது அலிபாபா இந்நிறுவனச்தை கைப்பற்றியுள்ளது.
முக்கியச் சந்தை
டாரஸ் நிறுவனம் பாகிஸ்தான் மட்டும் அல்லாமல், இலங்கை, மியான்மர், நேப்பாள் ஆகிய நாடுகளிலும் வர்த்தகம் செய்கிறது. இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 30,000 விற்பனையாளர்கள் மற்றும் 500 பிராண்டுகள் இத்தளத்தில் உள்ளது.
அமேசான் மற்றும் வால்மார்ட்
தென் ஆசிய சந்தை வர்த்தகத்தைக் கைப்பற்ற திட்டமிடும் அமேசான் தனது முதலீட்டை இரட்டிப்பாக்கவும், வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் இருக்கும் நிலையில் அலிபாபா பெரிய அளவிலான முடிவுகளை டாரஸ் நிறுவனத்தின் மூலம் எடுத்துள்ளது.