கொரோனா வைரஸால், அமெரிக்காவும், சீனாவும் வெட்டு குத்து என இறக்கும் அளவுக்கு , ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியில், அமெரிக்கா, தன் உற்பத்திகளை சீனாவில் இருந்து வெளியே கொண்டு வரவும் படு பயங்கரமாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.
அந்த கருத்தை ஆமோதிக்கும் விதத்தில், அமெரிக்காவின் உள் துறை அமைச்சகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியே பேசி இருக்கிறார்.
அதிகாரி
ஆலிஸ் வெல்ஸ் (Alice Wells) தான் அந்த அதிகாரி. இவர் அமெரிக்காவின் உள் துறை அமைச்சகத்தின் முதல் நிலை துணை அமைச்சராக (Principal Deputy Assistant Secretary of State) இருக்கிறார். இவர் தான் இந்தியா உடன், அமெரிக்கா டீல் செய்து கொள்ள தயாராக இருக்கிறது என நெற்றியில் அடித்தாற் போல மீண்டும் உரக்கச் சொல்லி இருக்கிறார்.
டீல்
அமெரிக்கா, இந்தியா உடன் டிரேட் டீல்ச் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் இந்தியாவால் டிரேட் டீலை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. கொரோனாவுக்குப் பிறகு பல கம்பெனிகள், தங்கள் சப்ளை செயின்களை பல நாடுகளுக்கு பரவலாக்க விரும்புகிறார்கள். கொரோனாவுக்குப் பிறகான உலக வியாபார வாய்ப்புகள், இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு எனச் சொல்லி இருக்கிறார் ஆலிஸ்.
பயன்படுத்திக் கொள்ளுங்கள்
இந்தியா, தன் சந்தையை பாதுகாத்துக் கொள்ளும் protectionist எண்ணத்தை கைவிட்டு, சந்தைக்கு சாதகமான விஷயங்களைச் செய்து, இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்கா, இந்தியா உடனான வியாபார சூழலை மேம்படுத்த விரும்புகிறது எனச் சொல்லி இருக்கிறார் ஆலிஸ் வெல்ஸ்.
அமெரிக்காவுக்கு மட்டுமல்ல
இது வெறுமனே அமெரிக்காவுக்கு மட்டும் வந்திருக்கும் பிரச்சனை அல்ல. இந்தியாவும் இந்த பிரச்சனையை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. அதோடு இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளோடு வைத்திருக்கும் உறவு முறை சந்திக்கும் பிரச்சனை எனச் சொல்லி இருக்கிறார் அந்த அதிகாரி.
சரியான கொள்கைகள்
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, சரியான கொள்கைகளை வகுத்து, நல்ல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குவேன் எனச் சொன்னால், இந்த அரிய வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆலோசனை கொடுத்து இருக்கிறார் அமெரிக்க அதிகாரி.
2 ஆண்டுகள்
கடந்த 2 ஆண்டுகளாக, அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு டிரேட் டீலுக்காக வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இரு தரப்பிலும் இருக்கும் வேறுபாடுகள் அப்படியே தொடர்கின்றன. இப்போது அந்த டிரேட் டீலுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா பிரச்சனையால் இந்தியாவுக்கு அந்த டிரேட் டீலின் அவசியம் அதிகரித்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.
வருத்தம்
"ஒரு வெளிநாட்டு கம்பெனி, இந்தியாவில் கணிசமான தொகையை முதலீடு செய்த பின், விதிகளை மாற்றுவது அல்லது வரி விதிப்பது போன்றவைகளை கடந்த கடந்த சில ஆண்டுகளில் செய்து இருக்கிறது இந்தியா" என தன் வருத்தத்தையும் தெளிவாக பதிவு செய்து இருக்கிறார் ஆலிஸ்.
உலக சப்ளை செயின்
இது இந்தியாவுக்கான நல்ல வாய்ப்பு. இந்த நேரத்தில், இந்தியா வெளிப்படையான கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும். உற்பத்தி ஆலைகள், இந்தியாவுக்கு வந்து தங்கள் ஆலைகளை நிறுவும் விதத்தில், வரி குறைப்பு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார் ஆலிஸ் வெல்ஸ்.
இந்தியா
அமெரிக்க அதிகாரி சொல்வதை எல்லாம் படிக்கவும், பார்க்கவும் நன்றாகத் தான் இருக்கிறது. இப்போது உண்மையாகவே, இந்தியாவுக்கு வர பல நிறுவனங்கள் விரும்புகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த கொரோனா காலத்தில், இந்தியா எப்படி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பது தான் கேள்வி? எல்லா அரசின் கையில் இருக்கிறது.