சர்வதேச அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் பல லட்சம் பேர் தங்களது வேலையை இழந்து வருகின்றனர்.
இதற்கிடையில் அடுத்தடுத்து பல ஆயிரம் பேரை பணியில் அமர்த்தி வருகின்றது ஆன்லைன் சில்லறை வர்த்தக ஜாம்பவான் ஆன அமேசான்.
ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ள அமேசான், மீண்டும் 1 லட்சம் பேரை பணியில் அமர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணியமர்த்த திட்டம்
இது குறித்து வெளியான அறிக்கையில், அமேசான் நிறுவனம் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் 1 லட்சம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய பணியமர்த்தலானது பேக்கிங் மற்றும் பொருட்களை எடுத்து செல்லுதல், ஆர்டர்களை வழி நடத்துதல் உள்ளிட்டவற்றை மேம்படுத்த உதவும் என தெரிவித்துள்ளது.
வலுவான வளர்ச்சி
இவ்வாறு பணியமர்த்தப்படுபவர்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேர பணியாளர்களாகவே இணைக்கப்படுவார்கள் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. சியாட்டிலை அடிப்படையாக இந்த நிறுவனத்தின் இந்த முடிவானது வர்த்தகம் மேம்பட்டு வரும் நிலையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதுவும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு லாபத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்டர்கள் அதிகரிப்பு
இதுக்கு முக்கிய காரணம் கொரோனா தொற்று நோய் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில் தொற்று பரவல் காரணமாக, மக்கள் வெளியில் செல்ல விரும்பாததால், ஆன்லைனிலேயே தங்களது ஆர்டர்களை செய்து வருகின்றனர். குறிப்பாக குரோசரிஸ் ஆர்டர்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அமேசானின் சப்ளையும் அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலை வாய்ப்பு
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 1,75,000 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் 33,000 ஊழியர்களை பணியமர்த்த வேண்டியிருப்பதாக அமேசான் கூறியிருந்தது. இந்த நேரத்தில் அமேசான் புதியதாக 100 புதிய கிடங்குகளை திறக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் இந்த வேலை வாப்புகளானது அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
போனஸும் உண்டு
மேலும் இந்த ஊழியர்கள் ஒரு மணி நேரத்திற்கு 15 டாலர்களை சம்பாதிக்கலாம் என்றும், அமேசான் இவர்களுக்கு புதியதாக சேருபவர்களுக்கு 1000 டாலர்களை போனஸாக கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
என்ன இந்த வேலை வாய்ப்புகள் இந்தியாவில் இல்லை என்பது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். எப்படி இருப்பினும் நிலவி வரும் நெருக்கடியான நிலையில் 1 லட்சம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அது நல்ல விஷயம் தானே.