முன்னனி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் இன்க் மேலும் 10,000 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் பிரிட்டனில் அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தொடர்ந்து அங்கு பணியமர்த்தலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இன்று வெளியான செய்தியொன்றில் பிரிட்டனில் மேலும் 10,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது நடப்பு ஆண்டின் இறுதியில் அந்த நாட்டில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை 55,000 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் பணியமர்த்தல்
அமேசானின் இந்த வேலை வாய்ப்பானது லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க், கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலகங்களில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதே போல பணியமர்த்தப்படும் ஊழியர்கள் அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் செயல்பாட்டு பிரிவில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலும் பணியமர்த்தல்
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசான், வட அமெரிக்காவில் லாகிஸ்டிக்ஸ் நடவடிக்கைகளுக்காக 75,000 தொழிலாளர்களை பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனை அறிவித்த மறுநாளே பிரிட்டனில் பிரிட்டனில் பணியமர்த்தல் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. இது உண்மையில் கொரோனாவினால் வேலையிழந்தவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கும்
அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், ஆன்லைன் சேவைகளின் தேவைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது. அதன் அறிகுறியாகவே பல்லாயிரம் ஊழியர்களை தொடர்ந்து பணியில் அமர்த்தி வருகின்றது. சியோட்டலை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஆண்டே 5 லட்சம் பேரை பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் என்ன நிலவரம்
இந்தியாவிலும் தனது வணிகத்தினை செய்து வரும் அமேசான் தொடர்ந்து இங்கும் விரிவாக்கம் செய்து வருகின்றது. அதிலும் தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இந்த ஆண்டும் இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான தேவையானது கூடும் என்றும், இதனால் அமேசானின் விற்பனையும் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி திட்டம்
மற்ற நாடுகளை விடவும் இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ள நிலையில், இந்தியாவிலும் இந்த விரிவாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமேசான் இந்தியா அதன் முன்கள பணியாளர்களுக்கு முதல்கட்ட தடுப்பூசி திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்தது.
ஊழியர்களுக்கு தடுப்பூசி
இது தற்போது டெல்லியில் உள்ள பணியாளர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. மேலும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிக்கான கட்டணத்தினையும் தானே செலுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தது. இதில் பணியாளர்கள், சர்வீஸ் பார்ட்னர்கள், விற்பனையாளார்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் என பலரும் அடங்குவர் என தெரிவித்திருந்தது.