உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான அமேசான் செப்டம்பர் காலாண்டில் தனது ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் கிளவுட் சேவையில் சிறப்பான வர்த்தகம் நடந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் லாபம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு இதில் மகிழ்ச்சி இல்லை என்பதே வருத்தமான விஷயம்.
நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் மட்டும் அமேசான் தனது உலகளாவிய வர்த்தகத்தின் மூலம் சுமார் 2.88 பில்லியன் டாலர் அதாவது 21,100 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது. கடந்த 4 காலாண்டுகளாக அமேசான் தொடர்ந்து 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக லாபத்தை அடைந்து வருவது இந்நிறுவனத்தின் புதிய சாதனை.
இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 29 சதவீதம் வரையில் உயர்ந்து 56.58 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் சந்தை கணிப்புகள் இதன் அளவு 57 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என வெளியான நிலையில் இந்த விஷயம் முதலீட்டாளர்களுக்கு இது சிறிய அளவிலான வருத்தத்தை அளித்தது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் இந்த வருடம் மட்டும் சுமார் 50 சதவீதம் வரையில் உயர்ந்த நிலையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் 7 சதவீதம் வரையில் சரிந்தது.