அமெரிக்கா. இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலகின் வல்லரசு நாடாக வலம் வரத் தொடங்கிவிட்டது.
Recommended Video
அந்த கால கட்டத்தில் சீனா எல்லாம், நாடுகள் பட்டியலில் இருக்கும் ஒரு பெயர் அவ்வளவு தான். 1950-களில் அமெரிக்கா மற்றும் சீனாவின் ஜிடிபியை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், சீனாவை விட சுமார் 10 மடங்கு பெரிய பொருளாதாரமாக இருந்தது அமெரிக்கா.
ஆனால் இன்று கதையே வேறு. 2025-ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சீனா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக வளம் வர வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
உறவு முறை
இப்படி ஒரு நாடு அசுரத் தனமக வளர்ந்து வருகிறது என்றால், வலல்ரசு நாடான அமெரிக்காவோடு உறவு முறை நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஆனால் சீனாவுக்கு அப்படி இல்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இருக்கும் உறவு முறை தான் தினமும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்து கொண்டு இருக்கிறதே.
பிரச்சனைகள் உதாரணம்
கொரோனாவை உலக நாடுகளுக்குப் பரப்பியது சீனா தான் என அமெரிக்கா குற்றம் சுமத்துவது தொடங்கி, ஹாங்காங்கில் சர்வாதிகாரி போல செயல்படுவது வரை அமெரிக்கா சர்வதேச அரங்கில் சீனாவை தாக்காத நாள் இல்லை எனலாம். அதே போல, சீனாவும், தனக்கு எதிராக அமெரிக்கா ஏதாவது சொன்னால், முன்பை போல பொறுமையாக எல்லாம் பேசுவது இல்லை. "திருப்பி அடிப்பேன் பாத்துக்க" என தைரியமாக அமெரிக்காவையே எச்சரித்து இருக்கிறது.
புகைச்சல் ஆரம்பம்
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போரைப் பற்றி படித்து இருப்பீர்கள். கடந்த 2018-ம் ஆண்டு சீன பொருட்கள் மீது பில்லியன் டாலர் கணக்கில் வரி விதித்தது அமெரிக்கா. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், சீனாவும் தன் தரப்பில் அமெரிக்க பொருட்கள் மீது பில்லியன் டாலர் கணக்கில் வரி விதித்தது. இதைத் தான் வர்த்தகப் போர் என்கிறோம். இதனால் உலக பங்குச் சந்தைகள் தடுமாறின. ஒட்டு மொத்த உலக ஏற்றுமதி இறக்குமதி கூட பாதிப்புக்கு உள்ளானது. இதை தீர்த்துக் கொள்ள, இரு தரப்பும் சேர்ந்து ஜனவரி 2020-ல் ஒரு டிரேட் டீல் கொண்டு வந்தார்கள்.
ட்ரம்ப் மிரட்டல்
கடந்த ஜனவரி 2020 மாதத்தில் தான் சீனா மற்றும் அமெரிக்கா டிரேட் டீலின் முதல் பாகத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டார்கள். அந்த டீலின் படி, சீனா, அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும், என்பது தான் டீலின் மிக முக்கிய அம்சம். சில மாதங்களுக்கு முன் "சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை, சீனா வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன்" என மிரட்டினார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
தொடரும் புகைச்சல்
வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடங்கிய புகைச்சல், இன்று ட்ரம்பின் அதிரடி பேச்சுக்களாலும், சீனாவின் நடவடிக்கைகளாலும் அடுத்த லெவலுக்கு வந்தன. கொரோனா வைரஸ் பிரச்சனை, ஹாங்காங் சுதந்திரப் பிரச்சனை, சிங் ஜியாங்க் உய்கர் இஸ்லாமியர்கள் பிரச்சனை, சிவிலியன் மிலிட்டர் ஃப்யூஷன் திட்டப் பிரச்சனை, டேட்டா பிரச்சனை என பல பிரச்சனைகளால் புகைச்சல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அடிக்கு பதிலடி
மேலே சொன்ன பிரச்சனைகளை அமெரிக்கா கையில் எடுத்துக் கொண்டு ஒரு அடி கொடுத்தால், சீன ஆதற்கு தக்கவாறு பதிலடி கொடுக்கத் தொடங்க்விட்டது. குறைந்தபட்சம் மிக கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து எச்சரிக்கையாவது செய்யத் தொடங்கி இருக்கிறது சீனா.
இந்த வாரத்தில் மட்டும்
அமெரிக்கா, பைட் டான்ஸ் என்கிற சீன கம்பெனியையே முழுமையாக தடை செய்யலாமா என யோசித்துக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஏற்கனவே இந்தியா சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
இந்த வாரத்தில் மட்டும் 1
அதே போல, அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளில், ஹாங்காங் டாலரில் கை வைக்கலாம். அது சீனாவுக்கு சரியான தண்டனையாக இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்களாம். ஏற்கனவே, அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருக்கும் ஏகப்பட்ட சீன மாணவர்களின் விசாக்கள் என்ன ஆகுமோ என்கிற பயமும் ஒரு பக்கம் இருக்கிறது.
சீனா சும்மாவா என்ன
அமெரிக்கா இப்படி தன் பங்குக்கு அலப்பறைகளைக் கொடுப்பதை சீனா வேடிக்கை பார்க்கவில்லை. சீனாவும் அமெரிக்க அதிகாரிகளின் விசாக்களில் கை வைத்து இருக்கிறது. ஹாங்காங் விவகாரங்களிலும், உய்கர் இஸ்லாமியர்கள் விவகாரங்களிலும் தலையிடக் கூடாது என மிகக் கடுமையாக எச்சரித்து இருக்கிறது. இவைகள் வெறுமனே எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல் சில காரியங்களில் செயல்படுத்தியும் இருக்கிறது சீனா.
அமெரிக்க கம்பெனிகள் ப்ளாக்
அமெரிக்கா சீன செயலிகளைத் தடை செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். சீனா அமெரிக்காவின் உலக டெக்னாலஜி தாதாவாக இருக்கும் கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்களை ப்ளாக் செய்து இருக்கிறது. ஹாங்காங்கிலும் தடை செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி இரண்டு நாடுகளும் திரும்பும் பக்கம் எல்லா தீ பற்றிக் கொண்டே போகிறது. இது எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.
நமக்கு தான் பாதிப்புகள்
இப்படி உலகின் டாப் இரு பொருளாதார சக்திகளும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதால் நமக்கு என்ன பிரச்சனை என்கிறீர்களா..? ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் சுமார் 4.9 சதவிகிதம் வரை சரிவைக் காணலாம் எனச் சொல்லி இருக்கிறது சர்வதேச பன்னாட்டு நிதியம். உலக பொருளாதாரம் சரிந்தால், ஏற்றுமதி இறக்குமதி தொடங்கி வேலை வாய்ப்புகள் வரை எல்லாமே பாதிக்கப்படும்.
ரெசசன் பயம்
உலக பொருளாதாரம் டல்லானால், உலக நாடுகளில் ரெசசன் தலை எடுத்துவிடும். உலகில் உள்ள 90 % பொருளாதாரங்கள் இந்த ஆண்டில் ஒரு ரெசசனைப் பார்க்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் தரவுகள். இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து பொருளாதாரத்தை மீட்க வழி பார்க்காமல் அமெரிக்காவும் சீனாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், நாம் எல்லோருமே கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பொருளாதார பிரச்சனைகள் இருந்து மீள்வது சிரமம் தான்.