சிட்னி: அமெரிக்காவினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் அங்கு பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது ஒரு புறம் இப்படி இருந்தாலும், மறுபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொடிய கொரோனா என்னும் அரக்கன் சீனாவில் தோன்றியிருந்தாலும், அதனால் அதிகம் தற்போதைக்கு பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா தான். இதுவும் இப்பிரச்சனைக்கு ஒரு காரணம் எனலாம்.
மீண்டும் தொடங்கும் வர்த்தக போர்
கடந்த ஆண்டில் தான் தொடர்ந்து அமெரிக்கா சீனா இடையே நிலவி வந்த வர்த்தக போர், ஒரு வழியாக சுமூக நிலையை எட்டியது எனலாம். ஆனால் தற்போது கொடிய கொரோனாவினால் மீண்டும் அமெரிக்கா சீனா இடையே பிரச்சனை எழ ஆரம்பித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் உலகம் முழுக்க 37 லட்சத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்
அமெரிக்காவில் பாதிப்பு
அமெரிக்காவில் இதுவரை 12,37,633 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 72,271 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தாலும், அது அமெரிக்காவினை முற்றிலும் நிலை குலைய வைத்துள்ளது எனலாம். இப்படி மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா, பொருளாதாரத்திலும் தன் பங்கிற்கு வீழ்ச்சியடையச் செய்துள்ளது.
வரலாறு காணாத வேலையின்மை
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு வேலையின்மை அதிகரித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை நிரூபிக்கும் விதமாக வேலையின்மை நலன் கருதி குவிந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி உலகிலேயே முதல் பொருளாதார நாடான அமெரிக்காவிலேயே இப்படி எனில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பதற்றத்திலேயே அந்த நாட்டு பங்கு சந்தைகள் அவ்வப்போது சரிந்து வருகின்றன.
சீனா தான் காரணம்
அந்த நாட்டு பொருளாதாரத்தினை மேம்படுத்த என்ன தான் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், அது எதுவும் இதுவரை முழுவதும் கைகொடுத்ததாக தெரியவில்லை. இதற்கிடையில் இதற்கு முழுக்க முழுக்க காரணம் சீனா தான் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் சீனா நினைத்திருந்தால், அதனை முழுமையாக சீனாவிலேயே தடுத்திருக்கலாம் என்றும் கூறியது.
அதிகரித்து வரும் பதற்றம்
அது மட்டும் இது வேண்டுமென்றே பரப்பப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்கா சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் விளைவு சீன சந்தைகளும் சரியத் தொடங்கியுள்ளன. இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், சீனாவில் கொரோனாவின் தாக்கம் இல்லாவிட்டாலும், மற்ற நாடுகளில் கொரோனாவின் பதற்றம் நிலவி வருகிறது.
பங்கு சந்தைகள் வீழ்ச்சி
இதனால் உலகம் முழுக்க விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு உலகம் முழுக்க தேவையும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் நுகர்வும் குறைந்துள்ளது. இதனை இன்னும் மேலும் அழுத்தத்திற்கு தள்ளும் வகையில் எண்ணெய் விலையும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதனால், இந்த சீன பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
சீனாவினை எச்சரிக்கும் டிரம்ப்
மேலும் ட்ரம்ப் நிர்வாகமும் சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் கொரோனா தோன்றி இருக்கலாம் என்றும் எச்சரித்து வருகின்றனர். எனினும் சீனா இதனை தொடர்ந்து மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய கட்டண விகிதங்களை விதிக்க உள்ளதாகவும் மிரட்டி வருகின்றார்.
தொற்று நோயின் பிறப்பிடம்
மேலும் அமெரிக்க அதிபர் சீனா தான் தொற்று நோயின் பிறப்பிடம் என்று தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றி இந்த வைரஸ், உலககெங்கிலும் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. ஆக இது குறித்து சீனா வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
கட்டணத்தினை அதிகரிக்க திட்டம்
இதே மற்றொரு அறிக்கையில், சமீபத்திய நாட்களில் அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் பதற்றத்தினால், இருதரப்பு உறவுகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. அதிலும் கடந்த ஒரு வார காலமாகவே அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தத்தினை ரத்து செய்வதாகவும், சீனாவின் மீது கட்டணங்களை அதிகரிக்க போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது.
புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள்
அதுமட்டும் அல்ல அமெரிக்காவின் தொழில் நுட்ப தயாரிப்புகளை வாங்கும் சீன நிறுவனங்களுக்கு கடுமையான புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் ஆதரித்து வருகிறது. அதோடு தொடர்ந்து கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் என்ற கருத்தினை முன் வைத்து வருகிறது. ஆக தற்போது இப்படியாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
சீனாவுக்கு எதிர்ப்பு
இது குறித்து அமெரிக்காவில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஒர் ஆய்வில், 66 சதவீதம் பேர் சீனாவுக்கு எதிரான கருத்துகளையே கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. எப்படியாயினும் அமெரிக்காவினை பகைத்து கொள்வது சீனாவுக்கு பிரச்சனை தான். இதற்கு மத்தியில் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற நினைப்பதாகவும், அவற்றில் சில இந்தியாவினை அணுகுவதாகவும் செய்திகள் கடந்த வாரத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.