கடந்த நான்கு நாட்களாகவே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வரும் இந்த நிலையில், இந்தியாவிலும் கடந்த மாதம் 26,000 ரூபாயாக இருந்த ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை, இந்த மாதத்தில் 27,000 ரூபாயை தொட்டுள்ளது.
அதிலும் கடந்த 5 நாட்களில் மட்டும் கிட்டதட்ட 60 டாலர்கள் அதிகரித்துள்ளது. ஆமாங்க.. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியன்று 1412.10 டாலர் வரை சென்ற தங்கத்தில் விலை, இன்று ஆகஸ்ட்5ம் தேதி 1471.95 டாலர் வரை அதிகரித்துள்ளது.
கிட்டதட்ட தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் 60 டாலர்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விலையேற்றம் எதனால்?
சர்வதேச சந்தையில் இந்த தீடீர் விலையேற்றத்திற்கு பல காரணம் இருந்தாலும், குறிப்பாக அமெரிக்கா ஜனாதிபதி, சீனாவின் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன பொருட்களுக்கு, மேலும் 10 சதவிகித வரியை உயர்த்த போவதாக கூறியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்களின் பாதுக்காப்பு கருதி தங்களது பங்குகளை சந்தையிலிருந்து எடுத்துள்ளதால், டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தும், தங்கத்தின் விலை அதிகரிக்கவும் தொடங்கியுள்ளது.
தங்கத்தின் விலையும் அதிகரிக்கும்
இது தவிர இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிலையில், இரு நாடுகளின் பொருளாதாரமும் பிரச்சனையிலேயே இருந்து வருகிறது. இதுகுறித்து எந்த அதிகாராப்பூர்வ தகவல்கள் வெளியாகாவிட்டாலும், கீழ்மட்ட தகவல்களின் படி சீனா இந்த வரிவிதிப்பால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், இதனால் பொருளாதாரத்தை மீட்க போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படும்
சர்வதேச அளவில் தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவிலும் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும் நிலையில், இந்த விலையேற்றம் எந்த அளவுக்கு நிலையானதாக இருக்கும் என்று தெரியவில்லை என்றும், ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சியினை குறைக்க, அதை ஈடுகட்ட தங்கத்தில் முதலீடு செய்வார்கள், எனினும் இந்த இரு நாடுகளின் வர்த்தகப் போர் ஒரு முடிவுக்கு வரும் வரையில் தங்கத்தில் விலை, சர்வதேச சந்தையை பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகளுடனே காணப்படும் என்றும் நிபுனர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
வேலை வாய்ப்பு உருவாக்கம் குறைந்துள்ளது
மேலும் அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு குறித்தான ஜூலை மாத அறிக்கையில், 1,64,000 வேலை வாய்ப்புகள் மட்டுமே கடந்த ஜூலை மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. இதுவே இதற்கு முந்தைய மாதத்தில் 1,71,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதே நேரத்தில் அமெரிக்காவின் 10 வருட பாண்டு வருவாயும் கடந்த நவம்பர் 2016லிருந்தே சரிந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று சரிந்த வண்ணமே காணப்படுகிறது.
இதையடுத்து அமெரிக்கா டாலரின் மதிப்பும் சரிந்து காணப்படுகிறது. இதனாலேயே இந்த உடனடி ஏற்றம் என்றாலும், அமெரிக்கா - சீனா பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வரையில் தங்கத்தில் விலை இப்படித்தான் இருக்கும். ஆக வர்த்தகர்கள் நீண்ட கால போக்கில் வாங்கி வைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரூபாயி,ம் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
இதே இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக் கண்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் தங்கத்தின் மதிப்பும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. என்ன தான் அரசு வரியை அதிகரித்தாலும், நம்மவர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த போவதில்லை என்றும், இந்தியாவை பொறுத்த வரையில் தங்கத்தின் விலை சற்று ஏற்றத்துடனே காணப்படும் என்றும் நிபுனர்கள் கூறுகின்றனர்.