ஒரு கால கட்டம் வரை அமெரிக்காவும் ரஷ்யாவும் எப்படி பங்காளிச் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்களோ, அதே போல இப்போது சீனாவும் அமெரிக்காவும் அடித்துக் கொள்கிறார்கள்.
இதில் என்ன ஒரே வித்தியாசம் என்றால், சீனா அமெரிக்காவோடு மட்டும் சண்டை போடவில்லை. இந்தியா போன்ற பல நாடுகளோடு சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சண்டையின் வெளிப்பாடாக, தற்போது அமெரிக்கா, சீனாவுக்கு ஒரு செம அடி கொடுத்து இருக்கிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
நேற்று 14 ஜூலை 2020, அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் "ஹாங்காங் நாட்டுக்கும் வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை (Trade Preference) முடிவுக்கு கொண்டு வருகிறேன்" எனச் சொல்லி இருக்கிறார். அதோடு ஹாங்காங் தன்னாட்சி சட்டத்தையும் (Hongkong Autonomy Act) கொண்டு வந்து இருக்கிறாராம்.
அதிக பலம்
இந்த புதிய ஹாங்காங் தன்னாட்சி சட்டம் (Hongkong Autonomy Act), ஹாங்காங்கின் சுதந்திரத்தை அழிக்கும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை, கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு பல கூடுதல் பலத்தை கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார். சமீபத்தில் தான், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த சீனா Anti Subversion Law கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராகத் தான் அமெரிக்கா ஹாங்காங் தன்னாட்சி சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறது.
செனட்டர் ஆதரவு
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஹாங்காங் தன்னாட்சி சட்டத்துக்கு பல டெமாக்ரெட் செனட்டர்களும் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். "சீனா தொடர்ந்து ஹாங்காங்கில் இருக்கும் மக்களின் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும், எந்த விதமான எதிர் வினைகளும் இன்றி, தொடர்ந்து சிதைக்க முடியாது என்பதை, இந்த சட்டம், சீனாவுக்கு தெளிவாக உணர்த்தும்" எனச் சொல்லி இருக்கிறார் டெமாக்ரெட் செனட்டர் க்ரிஸ் வென் ஹாலன் (Chris Van Hollen).
வர்த்தகப் பிரச்சனை
இந்த ஹாங்காங் தன்னாட்சி சட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஏதோ வர்த்தக முன்னுரிமையை முடிவுக்கு கொண்டு வருவேன் எனச் சொல்லி இருக்கிறாரே, அதனால் ஹாங்காங்குக்கு என்ன பிரச்சனை? ஹாங்காங்கையும் இனி சீனாவைப் போலத் தான் பார்ப்பார்கள். எந்த சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படாது. சீனாவில் இருந்து எப்படி முக்கிய டெக்னாலஜிகளை இறக்குமதி செய்யமாட்டார்களோ, அதே போல இனி ஹாங்காங்கில் இருந்தும் முக்கிய டெக்னாலஜிகளை இறக்குமதி செய்யமாட்டார்களாம்.
விளைவுகள் என்ன
ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், இனி ஹாங்காங் நாடு, அத்தனை எளிதாக, திறந்த வெளிச் சந்தைகளுடன் போட்டி போட முடியாது. இதை ட்ரம்பே தன் திருவாயால் சொல்லி இருக்கிறார். அதோடு "நாங்கள் இன்னும் நிறைய செய்ய இருக்கிறோம், காரணம் இப்போது ஒரு போட்டியாளரை நாம் இழந்து இருக்கிறோம்" எனவும் சொல்லி இருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.
சீன தரப்பு
இத்தனை விஷயங்கள் சீனாவுக்கு எதிராக நடக்கும் போது அவர்கள் என்ன கை கட்டி நிற்பார்களா? "சீனாவும் அமெரிக்காவின் தனி மனிதர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிப்போம்" என எச்சரித்து இருக்கிறார்கள். "அமெரிக்கா சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். அமெரிக்கா தன் தவறை திருத்திக் கொண்டால் நல்லது" என கோபத்தில் கொக்கரித்து இருக்கிறது சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம்.
வங்கிகளுக்கே தடை
இந்த புதிய அமெரிக்க சட்டத்தால், ஹாங்காங்கின் அடிபடை விதிகளை (தன்னாட்சி) பாதிக்கும் சீன அதிகாரிகள், ஹாங்காங் காவல் துறையினர்கள், அவர்களோடு அதிக பணப் பரிமாற்றங்களைச் செய்யும் வங்கிகள் என பலர் மீதும் தடை விதிக்க வழி வகை செய்கிறதாம். அதோடு இனி ஹாங்காங் மக்கள், அமெரிக்கா விசா வாங்குவதும் மிகவும் சிரமம் தான். அதே போல அமெரிக்க மக்களும் இனி விசா இல்லாமல் ஹாங்காங்குக்குச் செல்ல முடியாது.
வங்கிகளுக்கு சிக்கல்
மேலே சொன்னது போல ஹாங்காங்கின் தன்னாட்சியை பாதிக்கும் நிறுவனங்களோடு, சீன வங்கிகள் தொடர்ந்து வங்கி பணப் பரிமாற்றங்களைச் செய்தால், அது அமெரிக்காவின் தடையில் சென்று முடியும். அதன் பிறகு அமெரிக்க டாலர் பரிமாற்றங்களை மேற்கொள்வதும், அமெரிக்காவில் இயங்குவதும் சிரமமாகிவிடும். எனவே சீன வங்கிகள், ஹாங்காங்கை வளைக்கப் போராடும் சீன அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதா அல்லது உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தில் இயங்கி டாலர் பரிமாற்றங்களைச் செய்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
தொடர் புகைச்சல்
சில வாரங்களுக்கு முன்பு தான் சீனாவின் சிங்ஜியாங்க் (Xinjiang) பகுதியில் வாழும் உய்கர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, அமெரிக்கா ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதோடு சீன அதிகாரிகள் மீது தடையும் விதித்தது. அதற்கு முன் கொரோனா வைரஸ் பிரச்சனை, அதற்குமுன் வர்த்தகப் போர் என அமெரிக்காவும் சீனாவும் சண்டை போடும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மிகப் பெரிய பொருளாதாரம்
அமெரிக்காவும், சீனாவும் என்ன உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நாடுகளா? உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள். அப்படிப்பட்ட இரண்டு பேரும் தினம் தினம் எதேதோ புதிய காரணங்களைச் சொல்லி சண்டை போட்டுக் கொண்டு இருந்தால் உலக பொருளாதாரம் என்றைக்கு அதிகரித்து, மீண்டும் பழைய நிலைக்கு வருவது. உலக பொருளாதார நலனுக்காகவாவது இரு நாடுகளும் அமைதியை கடை பிடித்தால் நல்லது.