உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா கடந்த 4 வருடத்தில் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் அதிகளவிலான சர்ச்சைகளை எதிர்கொண்ட நிலையில் மக்களுக்கான தலைவராக அறியப்படும், அழைக்கப்படும் ஜோ பிடன் அமெரிக்காவில் 46வது அதிபராகப் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் இனி வரும் காலத்தில் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசின் ஒவ்வொரு முடிவுகளும், கொள்கை மாற்றங்களும் அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல, உலக நாடுகளையும் பாதிக்கும் என்பதால், ஜோ பிடன் வருகை இந்தியாவிற்கும் பிற உலக நாடுகளுக்கும் எந்த வகையில் லாபம் அளிக்கும்.
டொனால்டு டிரம்ப்
டிரம்ப் ஆட்சியில் அமெரிக்க அரசின் பல முடிவுகளால் பல்வேறு பாதிப்புகளை உலக நாடுகள் எதிர்கொண்டது மறுக்க முடியாது. குறிப்பாக இந்தியாவின் சிறப்பு வர்த்தக அந்தஸ்து நீக்கப்பட்டது, இந்தியப் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டது, இந்திய ஊழியர்களைக் குறித்துத் தீட்டப்பட்ட விசா கொள்கை மாற்றம் ஆகியவை இந்தியாவையும், இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவைப் பெரிய அளவில் பாதித்தது.
சீனாவுடன் பிரச்சனை
இந்தியாவைத் தொடர்ந்து சீனா மீதான வர்த்தகப் போர் உலக நாடுகளின் வர்த்தகச் சூழ்நிலையைப் பெரிய அளவில் பாதித்தது மறக்க முடியாது. இப்படிப் பல நாடுகளுடன் அமெரிக்காவின் நட்புறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஜோ பிடனும் உலக நாடுகளும்
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பிடன் ஆட்சியில் உலக நாடுகள் உடனான அமெரிக்காவின் கொள்கை முடிவுகள், உலக நாடுகள் உடனான நட்புறவு குறிப்பாகச் சீனாவுடனான நட்புறவு , வளரும் நாடுகளுக்கான கொள்கை வரைவு, பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட், பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்ட அறிவிப்புகள் போன்றவைகள் உலக நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது.
ஜோ பிடன் அசத்தல்
ஜோ பிடன் பதவியேற்று விழாவில் "America is back" என்ற முழக்கத்துடன், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்யும் 1.9 டில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது மிகவும் முக்கியமானதாகக் கூறினார்.
மக்களே முக்கியம்
அது மட்டும் அல்லாமல் இந்த மாபெரும் திட்டத்தில் 1 டிரில்லியன் டாலர் நேரடியாக அமெரிக்க மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும், 440 பில்லியன் டாலர் அமெரிக்காவில் சிறு வர்த்தகங்களை மேம்படுத்துவதற்காகச் செலவு செய்ய
உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் பொருளாதாரம்
இந்த 1.9 டிரில்லியன் டாலர் திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று அனைத்துத் தரப்பு மக்களாலும் நம்பப்படுகிறது. மேலும் இந்தப் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் பத்திர முதலீட்டின் லாபம் அதிகரித்துள்ளது.
இது அமெரிக்காவின் முதலீட்டு சந்தையில் முதலும் முக்கிய மாற்றம்.
அமெரிக்கப் பங்குச்சந்தை
ஜோ பிடன் அமெரிக்காவின் 46 அதிபராகப் பதவியேற்ற நாளில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் குறியீடு 0.83 சதவீதம் உயர்ந்து 31,188.38 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நாஸ்டாக் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 1.97 சதவீதம் வரையில் உயர்ந்து 13,457.25 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் 342 புள்ளிகள் உயர்விலும், நிஃப்டி 94 புள்ளிகள் உயர்விலும் வர்த்தகமாகி வருகிறது.