கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையும் கை கழுவ வைத்திருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் அரசாங்கங்கள், தங்கள் மக்களைப் பாதுகாக்க பெரிதும் முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அரசாங்கங்கள் தங்கள் கஜானாக்களை திறந்து, மக்களுக்காக அள்ளி இறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த நாடுகள் வரிசையில் வழக்கம் போல ஏறத் தாழ முதலிடம் பிடித்து இருக்கிறது அமெரிக்கா.
எவ்வளவு நிதி
அமெரிக்காவின் செனட் சபை மற்றும் வெள்ளை மாளிகை சுமாராக 2 ட்ரில்லியன் டாலர் மதிப்புக்கு கொரோனா வைரஸ் உதவித் தொகை பேக்கெஜை அறிவிக்க இரு தரப்பும் இணக்கமாக சம்மதித்து இருக்கிறார்களாம். இதுவரை அமெரிக்காவின் வரலாற்றில் இவ்வளவு பெரிய உதவித் தொகையை அறிவித்ததே இல்லை என டெமாக்ரெட் கட்சியின் செனட் உறுப்பினர் சக் சுமெர் (Chuck Schumer) சொல்லி இருக்கிறார்.
இந்திய மதிப்பில் எவ்வளவு
2 ட்ரில்லியன் டாலர் = 2 லட்சம் கோடி டாலர்.
2 லட்சம் கோடி டாலர் * 75 (1 டாலர் = 75 ரூபாய் என எடுத்துக் கொள்கிறோம்) = 150 லட்சம் கோடி ரூபாய்.
ஆக 150 லட்சம் கோடி ரூபாய் உதவித் தொகை உடன், அமெரிக்கா, கொரோன வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்க இருக்கிறது.
ஐந்து நாட்கள்
அமெரிக்க அரசு, வெள்ளை மாளிகை, செனட் உறுப்பினர்கள் என பல தரப்பினர்களும் கடந்த ஐந்து நாட்களாக கூடிப் பேசி, படு பயங்கரமாக விவாதித்து, 2 ட்ரில்லியன் டாலர் உதவித் தொகைத் திட்டத்துக்கு சம்மதித்து இருப்பதாக, அமெரிக்க செனட் மெஜாரிட்டி தலைவர் மிட்ச் மெக்கானெல் (Mitch McConnell) சொல்லி இருக்கிறார்.
சட்ட நடைமுறை
அமெரிக்காவின் செனட் மற்றும் ஹவுஸ் ஆஃப் ரெப்பசெண்டேடிவ்ஸ் இணைந்து, இந்த 2 ட்ரில்லியன் டாலர் உதவித் திட்டத்தை சட்டமாக்க வேண்டும். அதன் பிறகு தான் அமெரிக்க அதிபர் கையெழுத்து போட்டு, அனுமதி கொடுத்த பின் தான் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடியுமாம். இன்னும் செனட் & ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேஷனின் வேலை பாக்கி இருக்கிறதாம்.
வேலை இழப்பு
"பல தரப்பிலான மக்கள், இந்த கொரோனா பாதிப்பால் வேலை இழந்து இருக்கிறார்கள். இதில் அவர்கள் தவறு ஒன்றுமே இல்லை. இந்த மாதிரியான இக்கட்டான சூழலில், அவர்கள் எப்படி தங்கள் செலவுகள் சமாளிப்பார்கள்" என சக் சுமெர் (Chuck Schumer) கேள்வி எழுப்பி இருக்கிறார். "அவர்களை பாதுகாக்கத் தான் நாங்கள் வருகிறோம்" எனவும் ஆறுதலாக நான்கு வார்த்தை சொல்லி இருக்கிறார்.
என்ன செய்யப் போகிறார்கள்.
இந்த பெரிய உதவித் தொகை பணத்தைக் கொண்டு சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ உள் கட்டமைப்புகள், வியாபாரங்கள் மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் சராசரி அமெரிக்கர்களுக்கு கொடுக்க இருக்கிறார்களாம். சுருக்கமாக அமெரிக்கர்கள் கையில் பணத்தை நேரடியாகக் கொடுக்க இருக்கிறார்களாம்.
மேற்படி திட்டங்கள்
அது போக, சிறு குறு தொழில்களுக்கு மானியங்களை வழங்குவது, பில்லியன் டாலர் கணக்கில் பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது, வேலை இல்லா திண்டாட்டத்தின் போது கொடுக்கப்படும் சலுகைகளை விரிவாக்கம் செய்வது போன்ற சமூக நலத் திட்டங்களையும் இந்த பெரிய உதவித் தொகை பேக்கேஜை வைத்துச் செய்ய இருக்கிறார்களாம்.