டெல்லி: அமெரிக்காவோட ஜிகினி தோஸ்த்ங்க இந்தியா என்று வாய்கிழிய ட்ரம்ப பல சர்வதேச மேடைகளில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே "மோடி, நாங்க உங்களுக்கு தர்ற பொருட்களை எல்லாம் அந்த Huawei-க்கு தராதீங்க" என கடந்த மே 27, 2019 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்திலேயே பார்க்க முடிகிறது.
ஆக ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா முழுக்க முழுக்க சீனாவின் Huawei நிறுவனத்துக்கு தன்னால் ஆன அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. சில வாரங்களுக்கு முன் தான் Huawei நிறுவனத்தை எந்த நாட்டுக்குள்ளும் அனுமதிக்காதீர்கள் என ட்ரம்ப் வெளிப்படையாகச் சொல்லி Huawei-க்கு எதிரான தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அமெரிக்காவில் தடையும் விதித்தார்.
இந்த தடை Huawei நிறுவனத்துக்கு மட்டுமில்லாமல் Huawei இந்தியா, Huawei ஸ்ரீலங்கா, Huawei பாகிஸ்தான் போன்ற Huawei-யின் அனைத்து துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியது என இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கிடைத்த மே 27, 2019 கடிதத்தில் சொல்லப்பட்டிருப்பது போல Huawei நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து சப்ளையாகும் பொருட்கள் குறித்து டெலிகாம், நிதி ஆயோக், எலெக்ட்ரானிக்ஸ், ஐடி, வணிகம், முதன்மை அறிவியல் ஆலோசகர்கள் என பலரிடமும் கலந்து பேசி அந்தந்த துறை சார் கருத்துக்களை கேட்டிருக்கிறார்களாம்.
அதோடு இந்திய நிறுவனங்கள் ஏதாவது அமெரிக்காவின் மென்பொருள் சேவை அல்லது அமெரிக்க தயாரிப்பு பொருட்களை Huawei நிறுவனத்துக்கு விற்றால் அமெரிக்கா என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கும் என்கிற ரீதியிலும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கருத்துக்களைக் கேட்டிருக்கிறது ஜெய்சங்கர் தலைமையிலான மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.
இப்படி இந்தியா அமெரிக்கா மத்தியில் பேச்சு வார்த்தைகள் போய்க் கொண்டிருக்க, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் வேலைகளில் Huawei நிறுவனத்தை ஈடுபடுத்தலாமா, வேண்டாமா என மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் மத்திய டெலிகாம் அமைச்சகம். இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் உலகின் 5ஜி தொழில்நுட்பத்தில் பல காப்புரிமைகளை Huawei நிறுவனம் தான் வாங்கி வைத்திருக்கிறார்கள். சொல்லப் போனால் உலகிலேயே 5ஜி தொழில்நுட்பத்தை பெரிய அளவில் முன்னெடுத்தது Huawei நிறுவனம் தான் என்றால் மிகை ஆகாது.
இன்று வரை இந்தியா தன் எல்லா தலைமுறை அலைக்கற்றைகளுக்கும் நோக்கியா மற்றும் எரிக்ஸன் ஆகிய இரண்டு ஐரோப்பிய நிறுவனங்களின் இயந்திரங்களைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது. இப்போது 5ஜி அலைக்கற்றை இயந்திரங்கள் என வரும் போது Huawei நிறுவனத்துக்கும் வாய்ப்பு கொடுத்தால் தான் இந்தியா ஐரோப்பிய அழுத்தத்துக்கு உட்படாமல் இருக்க முடியும் எனவும் ஒரு தரப்பு வாதத்தை முன் வைக்கிறார்கள் சில அதிகாரிகள். இன்னும் சில அதிகாரிகளோ "அமெரிக்கா சொல்வது போல Huawei நிறுவனம் நம் தரவுகளைத் திருடி சீன அரசுக்கு தந்துவிடும் எனவே இருக்கும் இரண்டு நிறுவனத்தை நம்பி அனைத்து வேலைகளையும் செய்வோம்" என மறு வாதத்தையும் முன் வைக்கிறார்கள் மற்ற சில அதிகாரிகள். முடிவெடுக்க முடியாத இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறது இந்தியா.