கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அது கொரோனாவாக இருக்கட்டும், பொருளாதார ரீதியாகவும் பல அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
மேலும் சீன எல்லை மீறிச் செயல்படுகிறது என்றும் அமெரிக்க தொடர்ந்து குற்றசாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறது.
இதற்கிடையில் சீனாவே தான் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறது. ஆக அமெரிக்கா சீனா இடையே மீண்டும் தற்போது வர்த்தகப் போர் எழும் நிலை நிலவி வருகிறது.
கொரோனாவால் சீர் குலைவு
கொரோனா பிரச்சனையை தவறாகக் கையாண்டதால், அதனை மறைக்க சீனா முயன்று வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ் இன்று உலகையே நிலை குலைய வைத்துள்ளது. அதிலும் மிகப்பெரிய வல்லரசு நாடுகளையே திணற வைத்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா ரஷ்யா என பல நாடுகளும் பாதிப்பில் முதலாவதாக இடம்பெற்று உள்ளன.
பொருளாதார தடுப்பு பட்டியல்
அமெரிக்க வர்த்தக துறையானது வெள்ளிக்கிழமையன்று, 33 சீன நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களையும் மனித உரிமை மீறல்களுக்கான பொருளாதார தடுப்புப் பட்டியலில் சேர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் இராணுவ கொள்முதல் தொடர்பான நிறுவனங்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
தடுப்பு பட்டியல்
சீனாவின் அடக்குமுறை பிரச்சாரம், ஊழியர்களை கட்டாயப்படுத்துதல், உயர் தொழில்நுட்ப கண்கானிப்பு நிறுவனங்கள் என பல இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தக துறையானது 24 அரசு நிறுவனங்கள் மற்றும் சில வணிக நிறுவனங்களையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இவ்வாறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான நெட்போசாவும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்களும் லிஸ்டில் அடங்கும்
இது எல்லாவற்றையும் விட சீனாவின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Qihoo 360 நிறுவனமும் இந்த தடுப்பு பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க அரசின் ஒப்புதல் இல்லாமல், சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை அதன் நிறுவன பட்டியலில் சேர்ப்பதாகவும் அமெரிக்க வர்த்தக துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு தான் காரணம்
அதோடு சாப்ட் பேங்க் ஆதரவுடைய கிளவ்டுமைண்சும் (CloudMinds) இந்த தடுப்பு பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு காரணம் கருதி ஹூவாய் நிறுவனத்தின் செLலவாக்கை எப்படி அமெரிக்கா எப்படி கட்டுப்படுத்தியதோ, அதே நடவடிக்கைகளைத் தான் தற்போதும் பின்பற்றுகின்றது, கடந்த வாரம் ஹூவாய் சிப் உற்பத்தியை துண்டிக்க முயற்சித்தது நினைவுகூறத் தக்கது.
இது ஆதாரமற்ற குற்றசாட்டு
ஆனால் இதற்கெல்லாம் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என சீனாவும் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் கொரோனா வைரஸ் பரப்பியதற்கு சீனா தான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தக்க பதிலடி கொடுப்போம்
மேலும் இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமி்ட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை, சட்டங்களை மீறி நடப்பதாகும். அமெரிக்கா ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதனை சீனா நிச்சயம் ஏற்காது. அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் தக்க பதிலடி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இது திசை திருப்பும் செயல்
மேலும் அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், அமெரிக்கா சொந்த பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
வெளிப்படைத் தன்மையுடன் உள்ளது
கொரோனா பரவலை பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயல்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. அதோடு பல ஏராளமான பிரச்சனைகளையும் தியாகங்களையும் செய்து கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதுமட்டும் அல்ல சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்தே, உலகிற்கு வெளிப்படைத் தன்மையுடனே அனைத்து தகவல்களையும் சீனா அறிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டி வருகிறது.
எச்சரிக்கை செய்தோம்
நாங்கள் உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் சரியான நேரத்தில் கூறி உள்ளோம், உலக நாடுகளுக்கும் எச்சரிக்கை செய்தோம். கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம்.அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இதனை யார் பரப்பியது என்று அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உண்மையை கண்டு பிடிக்க முடியும். அவர்களை இதனை கண்டறிந்தால் மட்டுமே உலகத்திற்கு உண்மை என்ன என்பது தெரிய வரும்.