இன்று உலகத்தினையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வைரஸ் என்றால் அது கொரோனா தான். அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா தான்.
அது பொருளாதார ரீதியிலும் சரி, மக்கள் பாதிப்பிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே இந்த நிலை எனில் மற்ற நாடுகளுக்கு சொல்லவா வேண்டும். அதிலும் அமெரிக்கா 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் பின்னடைவை நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஃபெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 1967ல் இருந்து கண்கானிப்பை தொடங்கியதில் இருந்து, தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே உற்பத்தி மற்றும் வேலையின்மை குறித்தான அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. இது குறித்தான சிகாகோ ஃபெடரல் வங்கி வெளியிட்ட குறியீட்டு மதிப்பானது, கடந்த மாதத்தில் -16.74 ஆக சரிந்தது. இது கடந்த மார்ச் மாதத்தில் - 4.97 ஆக இருந்தது.
இந்த குறியீடானது முக்கிய நான்கு வகைகளில் இருந்து பெறப்பட்ட குறிகாட்டிகளால் ஆனது. இவை அனைத்தும் மார்ச் மாதத்தில் இருந்து சரிந்து வருகின்றன. அவை உற்பத்தி மற்றும் வருமானம், வேலைவாய்ப்பு, வேலையின்மை மற்றும் நுகர்வு, வீட்டுவசதி, விற்பனை, ஆர்டர்கள், சரக்கு இருப்புகள் உள்ளிட்டவற்றை அடிபப்டையாகக் கொண்டது.
தொழிலாளர் துறையின் அறிக்கையின் படி, கடந்த 10 வாரத்தில் 4 பேரில் ஒருவர் வேலையின்மை நலனுக்காக பதிவு செய்துள்ளனராம். கடந்த இரண்டு வாரங்களில் பொருளாதார வளர்ச்சி சற்று உயர்ந்துள்ள நிலையில், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவது மெதுவாகவோ அல்லது சமதள முறையாகவோ இருக்கக் கூடும் என்று பிட்ச் மதிப்பீடுகளின் தலைமை பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 2022ம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நடுப்பகுதி வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியினை எட்ட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிலும் மிகப்பெரிய பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் இருந்தும் அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். எனினும் அமெரிக்கா தொடர்ந்து, பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.