உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் திணறி வருகின்றன.
அதிலும் இன்று உலக அளவில் கொரோனா தாக்கத்தில் முதலிடம் வகிப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.
சரி இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள். கண்டிப்பாக சம்பந்தம் உண்டு.
சீனா மீது கோபம்
முதன் முதலாக சீனாவின் பரவ தொடங்கிய இந்த கொரோனா என்னும் கொடிய அரக்கன், இன்று உலகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகின்றது. எனினும் இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளானது அமெரிக்கா தான். ஆக கொரோனா விவகாரத்தில் ஆரம்பம் முதல் கொண்டே அமெரிக்காவுக்கு சீனா மீது கோபம் உள்ளது எனலாம்.
சீனாவுக்கு எதிராக திட்டம்
அது மட்டும் அல்ல, சீனாவிற்கு எதிராக பல அறிக்கைகளை தொடர்ந்து அமெரிக்கா வெளியிட்டு வருகிறது எனலாம். அத்துடன் சீனாவை தனிமைப்படுத்தவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு 18 அம்சத் திட்டம் ஒன்றினை தயார் செய்துள்ளதாக அறிவித்தது.
ராணுவத்திற்கு தேவையான நிதி
இந்த 18 அம்ச கோரிக்கையின் படி, பசிபிக் பிராந்தியத்தில் வலிமையை அதிகரிக்கவும், ராணுவத்திற்கு தேவையான 20 பில்லியன் டாலர் நிதியை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடனான ராணுவ உபகரணங்கள் விற்பனையை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஜப்பான் தனது ராணுவ பலத்தை மீண்டும் கட்டமைக்க உதவுவது, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் ராணுவ உபகரணங்கள் விற்பனையை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவுக்கு பலத்த அடி கொடுக்கும் விதமாக திட்டம்
மேலும் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பலத்த அடி கொடுக்கும் விதமாக, சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். சீனாவுடனான வர்த்தக சங்கிலியை துண்டிக்க வேண்டும் எனவும் அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட கொரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்த சீன அரசு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
பொருளாதார தடை விதிக்கலாம்
எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா குறித்த விசாரணைக்கு சீனா ஒத்துழைக்காவிட்டால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க டிரம்ப் தலைமையிலான அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என பல அம்சங்களை உள்ளடக்கிய 18 திட்டங்களும் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சீனா பொருட்கள் வேண்டாம்
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வணிக ஆலோசனை நிறுவனமான FTI Consulting மே 12 -14 தேதிகளில் 1,012 பேரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் 40% பேர் சீனாவின் தயாரிப்புகளை வாங்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்களாம். இதே 22% பேர் இந்திய பொருட்களை வேண்டாம் என்றும் கூறியுள்ளார்களாம்.
சீனா உண்மையாக இருக்குமா?
இதே மெக்ஸிகோ பொருட்களை 17% பேரும், ஐரோப்பா பொருட்களை 12% பேரும் வேண்டாம் என்றும் கூறியுள்ளனராம். இதில் வேடிக்கை என்னவெனில் 55 சதவீதம் பேர் ஜனவரியில் கையெழுத்தான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா உண்மையாக இருக்கும் என்று நம்பவில்லை என்றும் கூறியுள்ளதாக வெளியாகியுள்ளது.
அதிக கட்டணம் கொடுக்க தயாராக உள்ளோம்
இதே 78 சதவீதம் பேர் சீனாவிலிருந்து தங்களது தயாரிப்புகளை வெளியேற்ற தயாராக இருந்தால், அதற்கு அதிக கட்டணம் செலுத்த தயராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் 66% பேர் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிக மக்கள் போர்கொடி
இதே கடந்த மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு 66 சதவீதம் பேர், சீனாவை சாதகமற்ற நிலையில் வைத்துள்ளதாக காட்டியது. இது 2005க்கு பிறகு இது தான் அதிக விகிதமாகும். இது கடந்த 2017ல் டிரம்ப் பதவியேற்ற பின்பு 20% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து அமெரிக்க மக்கள் சீனாவிடம் இருந்து விலகியே இருப்பதை இது காட்டுகிறது.
சீனாவுக்கு எதிராக அமெரிக்க மக்கள்
ஆனால் எப்படியோங்க இதுவரையில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பும், அவரின் நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் மட்டுமே சீனாவினை குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் தற்போது அமெரிக்கா மக்களும் சீனாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்க ஆரம்பித்துள்ளதை இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.