வாஷிங்டன்: இன்றளவிலும் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கபட்ட நாடுகளில் முன்னணியில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.
உலக அளவில் கொரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இது ஒரு புறம் எனில், கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்தனர். இதனால் தங்கள் வருவாய் ஆதாரங்களை இழந்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மாஸ் ஊக்கத்தொகை
இதற்கிடையே அமெரிக்காவில் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜோ பைடன் உறுதி செய்துள்ளார்.
மசோதா நிறைவேற்றம்
இந்த கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது. இதையடுத்து இந்த சட்ட மசோதாவில் அதிபர் ஜோ பைடன் இன்று கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய்
அமெரிக்காவின் இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இந்த மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் (இன்றைய இந்திய மதிப்பில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல்) வழங்கும் பணி தொடங்கப்படும். அதோடு கொரோனா ஊக்கத்தொகையோடு, விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்றும் பைடன் அறிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்?
மேலும் அமெரிக்கர்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும். பின்னர் உபரி இருந்தால் மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இருக்கும்போது ஒவ்வொருவருக்கும் 600 டாலர்கள் வழங்க திட்டமிடப்பட்ட நிலையில், 2000 டாலர் அளிக்கப்பட வேண்டும் என்று நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.