ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவும், ஊழியர்களின் திறமைக்கேற்பவும், அவ்வப்போது சம்பள உயர்வை அறிவித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை சுமார் 10 சதவீதம் வரை உயர்த்த உள்ளது.
சம்பள உயர்வு குறித்து வெளிவந்திருக்கும் தகவல் அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20-22 டாலர்
அமெரிக்காவை பொறுத்தவரை ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு டாலர் என்ற சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் தற்போது ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்கள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆப்பிள் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான சம்பளத்தை 22 டாலராக உயர்த்த நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பட்ஜெட்டை அதிகரித்துள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம்
கடந்த சில மாதங்களாக உலக அளவில் பணவீக்கம் பல மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு சம்பளத்தை உயர்த்த ஆப்பிள் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திறமையான ஊழியர்கள்
அதுமட்டுமின்றி அமெரிக்காவில் தற்போது நல்ல, திறமையான ஊழியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திறமையான ஊழியர்களை விட்டு விட்டால் மீண்டும் அதுபோன்ற ஊழியர்கள் கிடைப்பது அரிது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே திறமையான ஊழியர்கள் பலர் ராஜினாமா செய்து வரும் நிலையில், திறமையான ஊழியர்களை தக்க வைப்பதற்கு சம்பள உயர்வு ஒன்றே வழி என்ற முடிவையும் ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது.
தொழிற்சங்கம்
மேலும் அமெரிக்காவை பொருத்தவரை கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் தற்போது ஊழியர்கள் மத்தியில் உள்ளது. கார்ப்பரேட் ஊழியர்கள் சங்கம் அமைக்கப்பட்டால், நிர்வாகத்திற்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தற்போது சம்பளம் உயர்வு என்ற ஆயுதத்தை ஆப்பிள் நிறுவனம் கையில் எடுத்து சங்கம் அமைக்கும் முயற்சிக்கு தற்காலிக முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூடுதல் ஊதிய உயர்வு
ஜோர்ஜியா, மேரிலாந்து, நியூயார்க் மற்றும் கென்டக்கி உள்ளிட்ட அமெரிக்காவின் பகுதிகளில் உள்ள ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைப்பது குறித்து தீவிரமாக கருத்துக்களை பரிமாற்றம் செய்து வருகின்றனர். எனவே இந்த ஊழியர்களுக்கு கூடுதலாக ஊதிய உயர்வு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உற்சாகம்
ஊதிய உயர்வு என்பது ஒவ்வொரு ஊழியரையும் மனதளவில் உற்சாகமாக்கி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் என்பதும் ஊதிய உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.