அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்குத் தனி மதிப்பு உள்ளது. இந்நிறுவன தயாரிப்புகளின் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் வரிசைக்கட்டி வாங்கும் வழக்கும் இன்றளவும் இருந்து வருகிறது.
ஆனால் கடந்த சில வருடங்களாகச் சீன நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சியில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு நிகரான ஸ்மார்ட்போன், டேப்லெட்களை மிகவும் குறைந்த விலையில் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், டிஜிட்டல் உலகின் முன்னோடியான ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கும் வரை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஒவ்வொரு தயாரிப்பிலும் வியப்புக்குரிய புதுமை இருக்கும். ஆனால் அவரின் மறைவிற்குப் பின் ஆப்பிள் நிறுவனத்தில் இன்னோவேஷன் என்பது காணாமல் போய்விட்டது.
ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பிற்குப் பின் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட பல முன்னணி தயாரிப்புகள் எதிர்பார்த்த விடவும் குறைவான அளவிலேயே விற்பனை ஆனது. இதுவே சீன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
விலை தான் பிரச்சனை..
ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாகச் சீன நிறுவனங்கள் தரமான பொருட்களை மலிவான விலையில் விற்பனை செய்ததே ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
இதனைக் கண்டறிந்த ஆப்பிள் தற்போது மலிவான ஐபேட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
மார்ச் 27
சிகாகோவில் லேன் டெக் கல்லூரி பெரெப் ஹைய் ஸ்கூலில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் தனது புதிய ஐபேட்-ஐ அறிமுகம் செய்ததுள்ளது.
இது இந்நிறுவனத்தின் மிகவும் மலிவான ஐபேட் ஆக இருக்கும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதிலடி
ஆப்பிள் தனது கொள்கைகளை விடுத்து முதல் முறையாக மலிவான ஐபேட்-ஐ அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இதன் அறிமுகம் கூகிளின் க்ரோம்புக் மற்றும் அமேசானின் பையர் டேப்லெட் ஆகியவற்றுக்குக் கடுமையான பாதிப்பை உருவாக்கும் விதமாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இந்த ஐபேட்-ஐ ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் அறிமுகம் செய்தார்.
இந்தியாவில்
பொதுவாக ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்களுக்குப் பின்பே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த வகையில் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிற நாடுகள்
இதே காலகட்டத்தில் இந்தியா உடன் ரஷ்யா, தாய்லாந்து, துருக்கி மற்றும் இன்னும் சில ஆசிய நாடுகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த மலிவான ஐபேட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விலை விபரம்
இந்தியாவில் இந்தப் புதிய ஐபேட் 32ஜிபி மற்றும் வைபை உடன் 28,000 ரூபாய்க்கும், 32ஜிபி + வைபை + செல்லுலார் சேவை உடன் 38,600 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.
வழிக்கு வந்தது ஆப்பிள்
ஐபோன் எக்ஸ் போல இதுவும் வெற்றி அடையவில்லை என்றால் அப்பிளின் அடுத்தத் தயாரிப்பின் விலை மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.
சராசரியாக ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை விலை மூலம் இந்நிறுவனத்திற்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் லாபமாகக் கிடைக்கிறது.