உலகின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் கடந்த 2 நாட்களில் சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தையும் தாண்டி பிற முன்னணி நிறுவனங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்கு என்ன காரணம்..?
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார், இந்த அறிவிப்பின் வாயிலாகத் தான் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிந்துள்ளது.
டொனால்டு டிரம்ப், சீனாவில் உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தளத்தை வைத்துள்ள அனைத்து அமெரிக்க நிறுவனங்களை, உடனடியாக மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்க நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து.
ஐபோன், ஐபேட்
ஆப்பிள் நிறுவனம் உலகளவில் விற்பனை செய்யும் ஐபோன், ஐபேட் போன்ற அனைத்து தயாரிப்புகளையும் சீனாவில் தான் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கிட்டதட்ட 90 சதவீத தயாரிப்புகள் சீனாவிலிருந்து தான் ஆப்பிள் சந்தைப்படுத்துகிறது.
உற்பத்தி
இப்படியிருக்கும் போது ஓரே இரவில் மொத்தத்தையும் மாற்றிவிட்டது டிரம்ப்-இன் அறிவிப்பு. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அப்படி ஆப்பிள் இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளில் உற்பத்தி தளத்தை அமைத்தால் கூடுதல் பணத்தைச் செலவழிக்க வேண்டும், இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் லாப அளவீடுகள் அதிகளவில் மாறுபடும். இதுவும் முதலீட்டாளர்களைப் பாதித்த ஒரு விஷயம் என்பதால் ஆப்பிள் மீதான மூதலீட்டை அதிகளவில் வெளியேற்றினர்.
இதன் வெளிப்பாடே ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் ஏற்பட்ட 44 பில்லியன் டாலர் சரிவு.
மொத்த உற்பத்தி
அப்படியே ஆப்பிள் தனது உற்பத்தியை வேறு நாடுகளுக்கு மற்ற வேண்டும் என்றாலும் உடனடியாக 5 முதல் 7 சதவீத உற்பத்தியை மட்டுமே இடமாற்றம் செய்ய முடியும், அதுவும் 18 மாதங்களில் செயல்படுத்தக்கூடியவை. அப்படியென்றால் அடுத்த 3 வருடத்தில் அதிகப்படியாக 20 சதவீத உற்பத்தியை மட்டுமே சீனாவிலிருந்து வெளியேற்ற முடியும். இது சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் கூட இல்லை என்பது தான் மிகவும் வருத்தமான செய்தி.
வர்த்தகப் போர்
சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரில் இதுவும் ஒரு பகுதி என அனைத்தும் அறிந்த டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப்-இன் இந்த அறிவிப்பு ஆப்பிள் நிறுவனத்தை மட்டும் அல்லாது புதிதாய் சீனாவில் உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் டெஸ்லா-வையும் பெரிய அளவில் பாதிக்கும்.
இந்தியாவிற்கு லாபம்
அது ஒருபக்கம் இருக்க ஆப்பிள் சீனாவில் இருந்து வெளியேறினால் அடுத்து வரவேண்டிய ஒரே இடம் இந்தியா தான். இந்தியாவில் ஆப்பிள் தனது மொத்த உற்பத்தி தளத்தையும் கொண்டு வந்தால் இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேருக்கு ஆப்பிள் வேலைவாய்ப்பைக் கொடுக்க முடியும்.