உலகின் பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என பாரபட்சம் இல்லாமல், ஒட்டுமொத்த உலகையே உருக்குலைத்த கொரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் நாடு அமெரிக்கா தான்.
அந்த வகையில் என்ன தான், பொருளாதார வல்லரசு நாடாக இருந்தாலும், கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா படுதோல்வி அடைந்துள்ளது என்றே கூற வேண்டும். முதல் அலை, இரண்டாவது அலையைக் கடந்து அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் மூன்றாவது அலை வீசத் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவால் மீண்டும் அங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கலிபோர்னியாவில் லாக்டவுன்
அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் முக்கிய மாகாணமான கலிபோர்னியாவில், திடீரென தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் அங்கு நோயாளிகளுக்கு ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படுமளவுக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 வாரங்கள் முன்பு கலிபோர்னியாவில் லாக்டவுன் நடைமுறைக்கு அமலுக்கு வந்தது.
சில்லறை வர்த்தக கடைகள் மூடல்
இந்த நிலையில் கலிபோர்னியாவை சுற்றியுள்ள சில்லறை வர்த்தக கடைகளை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது. இது அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூப்பர்டினோவை அடிப்படையாகக் கொண்ட டெக் ஜியான்டான ஆப்பிள் நிறுவனம், அதன் வலைதளத்தில் கலிப்போர்னியாவில் உள்ள 53 சில்லறை வர்த்தக கடைகளை தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸிலும் மூடல்
அமெரிக்காவின் மற்றொரு முக்கிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலும் சில்லறை வர்த்தக கடைகள் மூடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சான் பிரான்ஸிஷ்கோவிலும் சில கடைகளை மூடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் இவை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்றும் கூறப்படவில்லை.
செம விற்பனை
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் விழாக்கால பருவமான இந்த காலகட்டத்தில், இந்த தற்காலிக மூடலானது வந்துள்ளது. ஐபோன் தனது ஐபோன் 13, புதிய ஐபேடுகள் மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம் என பலவற்றால், விற்பனை சமீபத்தில் களைகட்டியதாகவும், இதன் காரணமாக செப்டம்பர் காலாண்டில் இதுவரை இல்லாத அளவு 100 பில்லியன் டாலர் வருவாயினை கண்டதாகவும் கூறியிருந்தது.
இயல்பு நிலை எப்போது?
ஆக சமீபத்தில் தான் விற்பனை அதிகரித்து மீண்டு வர தொடங்கியுள்ள இந்த நிலையில், இந்த மூடல் நடவடிக்கையானது மீண்டும் வந்துள்ளது. இதனால் அதன் விற்பனை மீண்டும் சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அப்படி தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் நிலையில், மீண்டும் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.