வடகொரியாவில் என்ன தான் நடக்கிறது? ஏற்கனவே பல சர்ச்சைகள் வெளியாகி வரும் நிலையில், அங்கு தற்போது உணவு பஞ்சம் என்பது தலை விரித்தாடி வருகிறது.
இது குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. எனினும் உண்மை நிலவரம் என்ன என்பது இதுவரையில் தெளிவாக தெரியவில்லை.
சாதரணமாகவே வட கொரியாவில் நடக்கும் விஷயங்கள் வெளியில் அவ்வளவாக தெரிவதில்லை. இந்த நிலையில் வட கொரியாவில் தற்போதைய உண்மை நிலவரம் தான் என்ன? தற்போது அங்கு உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதா? மக்களின் நிலை என்ன? அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இப்படி பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
உணவு பஞ்சம்
இது குறித்து வெளியான செய்தியில் தற்போது வட கொரியாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். உணவு பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு எட்டியுள்ளன. இன்னும் சில தகவல்கள் மக்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன காரணம்
கொரோனாவின் காரணமாக வட கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அந்த நாட்டில் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகின்றது. குறிப்பாக சீனாவில் இருந்து வடகொரியா பெரும் அளவிலான உதவிகளை பெற்று வந்த நிலையில், அவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு புயல் காரணமாக அங்கு விவசாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு பொருட்கள் உற்பத்தியானது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங்கிற்கு கடும் சவால்
ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்து வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிற்கு, இந்த மோசமான நிலையானது மேலும் கடுமையான சவாலான நிலையினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் நியூஸ் ஏஜென்ஸி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது. இந்த ஊடக அறிக்கையின் படி, உணவு பொருட்கள் விலையானது விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கிடு கிடு விலை ஏற்றம்
சில முக்கிய உணவு பொருட்களின் விலையானது வட கொரியாவில் மிக மோசமான அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலையானது கிலோ 3,335 ரூபாய்க்கும், ஒரு பாக்கெட் பிளாக் டீயின் விலை சுமார் 5,190 ரூபாய்க்கும், இதே ஒரு பாக்கெட் காஃபியின் விலையானது 7,414 ரூபாய்க்கும், அந்த நாட்டின் தலை நகரான பியோங்யாங்கில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
வட கொரியா எப்படி எதிர்கொள்ள போகிறது?
இதற்கிடையில் தனது கட்சியினை சேர்ந்தவர்களை உணவு பற்றாக்குறையை போக்க வேலை செய்யுமாறு கிம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா மற்றும் இயற்கை பேரிடர் காரணமாக இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், வட கொரியா இதனை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதும் தெரியவில்லை.
உணவு பற்றாக்குறை
ஐ நாவின் சமீபத்திய அறிக்கையின் படி, வட கொரியாவில் 8,60,000 டன் உணவு பற்றாக்குறை நிலவி வருகின்றது. பல உணவு பொருட்களுக்கும் மற்றும் சில உற்பத்தி செய்ய முடியாத பொருட்களுக்கும் சீனாவினையே நம்பியுள்ள நிலையில், சீனா மனசு வைத்தால் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications