ஜனவரி 2020 காலகட்டத்தில் உலகம் கொரோனா வைரஸை அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. சீனா மட்டும் கொரோனா வைரஸ் உடன் போராடிக் கொண்டு இருந்தது.
இப்போது உலகமே கொரோனா உடன் மல்லுகட்டிக் கொண்டு இருக்கிறது. அவ்வளவு ஏன் சீனாவிலேயே, கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சரி, சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அடிப்பதற்கும், சீனாவில் இருக்கும் பெப்ஸி (Pepsi) குளிர்பான கம்பெனியை மூடுவதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?
கொரோனா தான் காரணம்
சீனாவில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அடித்துக் கொண்டிருக்கும் போது, மக்கள் மேற்கொண்டு பாதிக்கப்படாமல் இருக்க, சீன அரசு சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. ஆதன் ஒரு பகுதியாகத் தான் பெப்ஸி நிறுவனத்தை மூடச் சொல்லி இருக்கிறார்களாம். அது சரி குறிப்பிட்டு பெப்ஸி ஆலையை மட்டும் மூட என்ன காரணம்?
ஊழியர்களுக்கு கொரோனா
பெய்ஜிங்கில், பெப்ஸி நிறுவனத்துக்குச் சொந்தமான தின் பண்ட உற்பத்தி ஆலையில் வேலை பார்க்கும் ஊழியர்களில், சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி இருக்கிறதாம். எனவே தான், அமெரிக்காவின் பெப்ஸி நிறுவன ஆலையை மூடச் சொல்லி இருக்கிறார்களாம். பெப்ஸி நிறுவன ஆலையை தற்காலிகமாக மூடச் சொல்லி இருக்கிறார்களா? எப்போது திறக்கப்படும் என்கிற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்க இறைச்சிக் கடை
பெப்ஸி நிறுவன ஆலையை ஷட் டவுன் செய்ததைப் போல, டைசன் ஃபுட்ஸ் (Tyson Foods) என்கிற அமெரிக்க இறைச்சி கம்பெனியின் உணவுகளுக்கும் தடை விதித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் டைசன் கம்பெனியின் உற்பத்தி ஆலையில், வேலை செய்யும் ஊழியர்களில், ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம்.
டைசன் ஃபுட்ஸுக்குத் தடை
எனவே, அமெரிக்காவின் டைசன் ஃபுட்ஸ் கம்பெனியில் இருந்து, சீனாவுக்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தற்காலிகத் தடை விதித்து இருக்கிறார்களாம். இதுவரை, டைசன் ஃபுட்ஸ் கம்பெனியில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும் சரக்குகளை சீன அரசு பறிமுதல் செய்யும் எனவும் சொல்லி இருக்கிறது சீன அரசு தரப்பு.
சீனா அமெரிக்கா சண்டை
உண்மையாகவே கொரோனா தொற்றினால் தான் பெப்ஸி கம்பெனிக்குச் சொந்தமான திண் பண்ட உற்பத்தி ஆலையை மூடினார்கள், டைசன் ஃபுட்ஸ் கம்பெனியிடம் இருந்து பொருட்களை வாங்க தடை விதித்து இருக்கிறார்கள் என்றால் பாராட்டுக்குரியது. ஆனால் அமெரிக்காவை பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக செய்வது போல இருந்தால், ட்ரம்பும் தன் தரப்பில், சீன நிறுவனங்களுக்கு குடைச்சல் கொடுப்பாரே.
இரு நாட்டு தலைவர்கள்
சீனா, நல்லதுக்காகவே செய்ததாக இருக்கட்டும். சீனா இந்த இரண்டு நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை சீனர்களை காப்பாற்றத் தான் என்பதை அமெரிக்கா சரியாக புரிந்து கொள்ளுமா? டொனால்ட் ட்ரம்ப் புரிந்து கொள்வாரா என்பதே கொஞ்சம் சந்தேகமாகத் தான் இருக்கிறது. இரு நாட்டு தலைவர்களுக்கும் கொஞ்சம் புரிதல், இருந்தால் பெரிய வர்த்தகப் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். தவிர்ப்பார்கள் என்று நம்புவோம்.