உலகின் நான்காவது பெரும் பணக்காரர் ஆக விளங்கும் பில் கேட்ஸ் டெக் உலகை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்ட பெருமைக்கு உரியவர். பில் கேட்ஸ்-ன் மைக்ரோசாப்ட் வெற்றிக்குப் பின்பு தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெக் துறையின் ஆதிக்கம் அதிகரித்தது.
இந்நிலையில் உலகளவில் டெக் துறையின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்ட பில் கேட்ஸ் தற்போது விவசாயத்தில் இறங்கியுள்ளார் என்றால் நம்ப முடியுமா..? அதுவும் அமெரிக்காவிலேயே அதிக விவசாய நிலங்களை வைத்துள்ள ஒரு பெரும் நிலப்பிரபு பில் கேட்ஸ் தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
இது அனைத்துமே உண்மை, என்பது தான் வியக்கவைக்கும் உண்மை.
பில் கேஸ்ட் மாஸ்ட்ர் பிளான்
பில் கேஸ்ட் மைக்ரோசாப்ட் நிறுவன பொறுப்புகளில் நேரடி தலையீட்டில் இருந்து வெளியேறிய நாள் முதல் சுகாதாரம், ஆரோக்கியம், சுற்றுச்சூழல், மருத்துவம் எனப் பல துறையில் தனது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மூலம் செய்து வருகிறார்.
முகேஷ் அம்பானி முதலீடு
சமீபத்தில் கூட உலக நாடுகள் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வில் இறங்கியுள்ள ஒரு நிறுவனத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தப் புதிய நிறுவனத்தில் இந்தியப் பணக்காரரான முகேஷ் அம்பானி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2,42,000 ஏக்கர் நிலம்
இந்நிலையில் தற்போது பில்கேட்ஸ் விவசாயத் துறையில் இறங்க முடிவு செய்து கடந்த சில வருடங்களில் சத்தமே இல்லாமல் அமெரிக்காவில் பல பகுதிகளில் இருந்து சுமார் 2,42,000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய விவசாய நில உரிமையாளராக உயர்ந்துள்ளார்.
18 மாநிலங்கள்
சமீபத்தில் அமெரிக்காவில் ப்ளோரிடா, வாஷிங்டன் மாநிலங்களில் விவசாய நிலங்களை வாங்கியதைத் தொடர்ந்து சுமார் 18 மாநிலங்களில் நிலத்தைக் கைப்பற்றியுள்ளார் பில் கேட்ஸ். குறிப்பாக லூசியானாவில் 69,071 ஏக்கர், ஆர்கன்சாஸில் 47,927 ஏக்கர் என விவசாய நிலங்களை வாங்கிக் குவித்துள்ளார்.
கேஸ்கேட் இண்வெஸ்ட்மென்ட் நிறுவனம்
இந்த நிலத்தைப் பில் கேட்ஸ்-ன் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இண்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும் 3ஆம் தரப்பு நிறுவனத்தின் கூட்டணி வாயிலாகவும் இந்த விவசாய நிலத்தைக் கைப்பற்றியுள்ளார். பில்கேட்ஸ் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசிய பகுதிகளிலும் விவசாய நிலத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நீண்ட காலமாக விவசாயத் துறையில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சூப்பர் கார்ப்ஸ் என்ற பெயரில் எந்தப் பருவ நிலையிலும் வளரும் பயிர்கள் மற்றும் அதிகப் பால் உற்பத்தி செய்யும் மாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.