அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான போயிங் (BOEING) விமானங்கள் வடிமமைப்பு, உற்பத்தி, விமான விற்பனை, ராக்கெட் தயாரிப்பு, செயற்கைகோள் தயாரிப்பு, தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்யும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும்.
போயிங் நிறுவனம் உலகின் இரண்டாவது பெரிய விமான உற்பத்தி நிறுவனமாகும். 2018 வருவாயின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமாகும். எல்லாவற்றையும் விட அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் ஆகும்.
இப்படி இருக்கும் ஒரு ஜாம்பவான் ஆன போயிங் நிறுவனம், கொரொனா வைரஸ் பயத்தால் பயணத்துறை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம். இதன் காரணமாக 12,000 மேற்பட்ட வேலைகளை குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல இன்னும் கூட வேலைகளை குறைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்த நிறுவனம் புதன் கிழமையன்று 6,770 பேரினை பணி நீக்கம் செய்வதாகவும், மேலும் வரவிருக்கும் வாரங்களில் ஊழியர்கள் தானாக முன்வந்து வெளியேறுவதற்கான சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் 5,520 ஊழியர்களை குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சுமார் 1,60,000 ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், சுமார் 10 சதவீதம் குறைப்பதாக போயிங் கூறியிருந்தது. ஆக அடுத்த சில மாதங்களில் இன்னும் சில ஆயிரம் வேலைகள் நீக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பணி நீக்கங்கள் போயிங் விமான வணிகத்தின் சொந்த இடமான சியாட்டில் பகுதியில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதலாக சர்வதேச பகுதிகளில் உள்ள கிளைகளிலும் பணி நீக்கம் இருக்கும் என்றும் கூறியுள்ளது. ஆனால் இது எத்தனை பேர் என்ற விவரங்களை அளிக்கவில்லை.
அமெரிக்காவின் கொரோனாவின் தாக்கம் உச்சம் கொண்டுள்ள நிலையில், அங்கு விமான போக்குவரத்து கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் 96 சதவீதம் வீழ்ச்சி கண்டது. எனினும் தற்போது சற்று மீண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
பெருகி வரும் கொரோனா பெருந்தொற்று உலகின் பல துறைகளில் பெரும் அழிவைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறிப்பாக விமான போக்குவரத்து துறையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியையே தான் நாம் கண்டு வருகிறோம்.