கொரோனா யாரைத் தான் விட்டு வைத்தது. எந்த துறையை பாதிக்காமல் இருந்தது என கணக்கு எடுத்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம், அந்த அளவுக்கு கொரோனாவின் தாக்கம் பல துறைகளிலும் எதிரொலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
அப்படி ஒரு மோசமான எதிர் வினையைத் தான் பிபி plc (BP Plc) என்கிற பிரிட்டனைச் சேர்ந்த கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவனம் சந்தித்து இருக்கிறது.
சுமாராக 10,000 பேரை வேலையில் இருந்து நீக்கி, வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம்.
15 % ஊழியர்கள்
ஏற்கனவே BP Plc நிறுவனம், தன்னுடைய வியாபாரத்தை கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் துறையில் இருந்து, மரபு சாரா ஆற்றல் (Renewable Energy) துறைக்கு மாற்றிக் கொள்ள இருப்பதாகச் சொன்னது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா பிரச்சனை மற்றும் கம்பெனியின் மாற்றத்தை கருத்தில் கொண்டு BP Plc நிறுவனத்தில் வேலை பார்க்கும் மொத்த ஊழியர்களில் 15 % பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம்.
ஊழியர்கள் கணக்கு
உலகம் முழுக்க BP Plc நிறுவனத்தில் சுமாராக 70,100 பேர் வேலை பார்க்கிறார்களாம். இவர்களில் சுமார் 10,000 பேரைத் தான் இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். பிரிட்டனில் மட்டும் சுமாராக 15,000 பேர் வேலை பார்க்கிறார்களாம். இவர்களில் இருந்து மட்டும் 2,000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம்.
முன்னணி ஊழியரகள் இல்லை
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த லே ஆஃபில், அலுவலக வேலைகளில் இருப்பவர்களைத் தான் அதிகம் வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். களத்தில் இறங்கி பணியாற்றும் front-line operational ஊழியர்கள் அதிகம் லே ஆஃப் செய்யப் போவதில்லை எனவும் BP Plc நிறுவனமே சொல்லி இருக்கிறது.
செலவு குறைப்பு
கொரோனா வைரஸ் பிரச்சனையால், பல எண்ணெய் கம்பெனிகளும், தங்கள் செலவீனங்களைக் குறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதே போல BP Plc நிறுவனமும், தன் 2020-ம் ஆண்டுக்கான செலவீனங்களைக் குறைத்து இருக்கிறார்களாம். மேற்கொண்டு BP Plc நிறுவனம், தன் செலவுகளை இன்னும் குறைத்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் BP Plc முதன்மைச் செயல் அதிகாரி பெர்னார்ட் லூனி (Bernard Looney).