பட்ஜெட் சூடு பிடித்துவிட்டது. மத்திய அரசு ஊழியர்கள், குறிப்பாக நிதி அமைச்சகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அல்வா கொடுத்து வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.
ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும், இந்த 2020 - 21 பட்ஜெட்டில் இதை எல்லாம் எதிர்பார்ப்பதாகச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் சூடாக ஓடிக் கொண்டு இருக்க... அந்த நிதி அமைச்சரின் பெட்டி பற்றிய சுவாரஸ்யக் கதைகள் நமக்கு கிடைத்து இருக்கின்றன.
அந்த பெட்டி
இந்தியாவில், கடந்த பிப்ரவரி 2019 வரை, நிதி அமைச்சர்கள் அனைவரும் கையில் ஒரு லெதர் பெட்டியைக் கொண்டு வருவார்கள். அதில் தான் பட்ஜெட் டாக்குமெண்ட்கள் இருக்கும். அந்த பெட்டி உடன், பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு தான் எல்லா நிதி அமைச்சர்களும் பாராளுமன்றத்தில் தங்கள் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்கள். இது என்ன வழக்கம்...? ஏன் வந்தது..?
பெட்டியின் கதை
19-ம் நூற்றாண்டில், 1860-ம் ஆண்டில் தான் முதல் பட்ஜெட் பாக்ஸ் உருவாக்கப்பட்டது. இந்த பட்ஜெட் பெட்டியை வில்லியம் எவர்ட் க்ளாட் ஸ்டோன் (William Ewart Gladstone) என்கிற இங்கிலாந்து சான்சிலருக்காக உருவாக்கினார்கள். இந்த பட்ஜெட் பெட்டியை மரத்தில் செய்து, மேலே ஸ்கார்லெட் லெதர் ஃபினிஷ் கொடுத்து இருந்தார்கள்.
எதற்கு உருவாக்கினார்கள்
1860-ல் இந்த பெட்டியைக் கொண்டு வருவதற்கு முன், க்ளாட் ஸ்டோன், தன் லெதர் பையில் தான் பட்ஜெட் தொடர்பான டாக்குமெண்ட்களைக் கொண்டு வந்தாராம். அவர் லெதர் பையில் வைத்த பட்ஜெட் பேப்பர்கள் கசங்கிவிட்டதோ என்னமோ தெரியவில்லை. அதன் பிறகு, தன் பட்ஜெட் பேப்பர்களை வைக்க, ஒரு நல்ல பெட்டியைக் கேட்டு இருக்கிறார். அதற்காக உருவாக்கப்பட்டது தான் அந்த பட்ஜெட் பாக்ஸ்
பட்ஜெட் என்றால் என்ன..?
அவ்வளவு ஏன்..? பட்ஜெட் என்கிற சொல்லுக்கே இன்னொரு சுவாரஸ்ய தகவலும் இருக்கிறது. பட்ஜெட் என்றால் பிரெஞ்சு மொழியில் "குட்டிப் பை" என்று பொருளாம். ஆக எப்படியோ பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர்கள் பயன்படுத்தும் குட்டிப் பையோடு பட்ஜெட் என்கிற சொல்லும் பொருந்திப் போகிறது.
இங்கிலாந்து வழக்கம்
இங்கிலாந்தில், க்ளாட் ஸ்டோன் காலத்தில் செய்த பெட்டி அடுத்தடுத்த சான்சிலர்களுக்கு கை மாற்றப்பட்டு வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு தான் க்ளாட் ஸ்டோன் காலத்தில் செய்த பட்ஜெட் பெட்டிக்கு இங்கிலாந்து பிரியா விடை கொடுத்தது. ஜார்ஜ் ஆஸ்பார்ன் (George Osborne) தான் இங்கிலாந்துக்கான புதிய பட்ஜெட் பெட்டியைக் கொண்டு வந்தார்.
இந்தியாவில்
இங்கிலாந்தைப் போல இந்தியாவில் பட்ஜெட் பெட்டியைக் கைமாற்றும் வழக்கம் இல்லை. பல நிதி அமைச்சர்களும் பல விதமான பெட்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதே போல நிறத்திலும் எந்த கட்டுப்பாடுகளையும் காட்டியதில்லை. சிவப்பு, அரக்கு, கறுப்பு, டான் நிறம் என பல நிற பெட்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பெட்டியே கிடையாது
நடப்பு 2019 - 20 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் முழு நேர பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தான், இந்த பட்ஜெட் பெட்டி முறையை மாற்றி, "பாஹி கத்தா" முறையில், பட்ஜெட் பேப்பர்களை உள்ளே வைத்து, நான்கு முனைகளில் இருந்தும் மடிக்கும் துணியில் வைத்துக் கொண்டு வந்தார். அநேகமாக இந்த வருடமும் நிர்மலா சீதாராமன் பாஹி கத்தா முறையில் தன் பட்ஜெட் பேப்பர்களைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.