பெண்களுக்காக, பெண்களால் உருவாக்கப்பட்ட மிகவும் பாதுகாப்பான டேட்டிங் தளமாகக் கருதப்படும் பம்பிள் செயலியின் தாய் நிறுவனமான பம்பிள் இன்க் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 67 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 72 டாலர் வரையில் உயர்ந்தது.
இதன் மூலம் பம்பிள் இன்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான Whitney Wolfe Herd-யிடம் இருக்கும் பம்பிள் இன்க் நிறுவன பங்குகளின் மதிப்பு 1.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விட்னி வோல்ஃப் ஹெர்ட் முதல் முறையாகப் பில்லியனர் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.
பெண் தொழில் முனைவோர்
பெண்கள் தொழில் முனைவோராக இருப்பது இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா போன்ற முன்னேற்றம் அடைந்த நாடுகளிலும் இன்றளவும் மிகவும் சாவலாகவே இருக்கும் நிலையில் விட்னி வோல்ஃப் ஹெர்ட்-ன் வெற்றி அனைத்துப் பெண் தொழில்முனைவோருக்கு முன் உதாரணமாக இருக்கும்.
டின்டர் விட்டு வெளியேற்றம்
விட்னி வோல்ஃப் ஹெர்ட் முதல் உலகிலேயே மிகவும் பிரபலமாக விளங்கும் டேட்டிங் தளமான Tinder நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் துணை தலைவராக இருந்தார். ஆனால் சக ஊழியர்கள் உடனான பிரச்சனை காரணமாக 2014ல் டின்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய விட்னி வோல்ஃப் ஹெர்ட், இந்நிறுவனத்தின் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் வெற்றிப்பெற்ற விட்னி வோல்ஃப் ஹெர்ட்-க்கு சுமார் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான டின்டர் பங்குகள் கொடுக்கப்பட்டது.
பம்பிள் செயலி துவக்கம்
டினடர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய விட்னி வோல்ஃப் ஹெர்ட், பெண்களுக்காக ஒரு பாதுகாப்பு நிறைந்த, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஒரு டேட்டிங் தளத்தை உருவாக்க வேண்டும் திட்டத்துடன் பம்பிள் செயலியை உருவாக்கினார். இந்தச் செயலி ஆரம்பம் முதலே பெரிய அளவிலான வரவேற்பை அடைந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
டின்டர்க்குப் போட்டியாகப் பம்பிள்
வெளிநாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் டேட்டிங் செயலிகள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டின்டர் ஆப்-க்குப் போட்டியாக உருவாக்கப்பட்டது தான் இந்தப் பம்பிள் ஆப். பம்பிள் செயலியில் மற்ற செயலிகளில் இல்லாதவாறு சிறப்பு வசதி உள்ளது.
பெண்கள் முன்னுரிமை
இந்தச் செயலியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் இருந்தாலும், பெண்கள் தான் முதலில் விருப்பத்தைத் தெரிவிக்க முடியும், இதனால் பெண்களுக்கு விருப்பம் இல்லாத நபர்களிடம் இருந்து பிரச்சனை வராது. இந்தப் பிரத்தியேக சேவையின் காரணமாகப் பெண்களுக்கு மத்தியில் இந்தப் பம்பிள் ஆப் பெரிய அளவில் வரவேற்பை அடைந்தது.
100 மில்லியன் வாடிக்கையாளர்
மேலும் இந்த ஆப்-ல் லொகேஷன் அடிப்படையில், விருப்பமானவர்களைத் தேர்வு செய்ய முடியும் என்பதால் நகரங்களில் மிகவும் பிரபலமானவர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இந்தச் செயலியில் உள்ளதால் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க துவங்கியது. இதன் மூலம் பம்பிள் செயலியில் தற்போது 100 மில்லியனுக்கு அதிகமாக மக்கள் பதிவு செய்துள்ளனர்.
14 பில்லியன் டாலராக மதிப்பீடு
இந்தி பம்பிள் செயலிக்குப் பிரியங்கா சோப்ரா, செரினா வில்லியம்ஸ் எனப் பல முன்னணி பிரிபலங்கள் பிராண்டிங் செய்யும் காரணத்தால் இந்நிறுவனம் வர்த்தகம், டெக், வாடிக்கையாளர்கள், கடன் உட்பட அனைத்தையும் கருத்தில் கொண்டு 14 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது.
85 சதவீதம் உயர்வு
வியாழக்கிழமை வெளியான ஐபிஓ மூலம் இந்நிறுவனம் 2.15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது. ஐபிஓ வெளியானதைத் தொடர்ந்து பட்டியல் விலையை விடவும் சுமார் 85 சதவீதம் வரையில் உயர்ந்துள்ள காரணத்தால் இந்நிறுவனப் பங்குகள் 72 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.