சீனா மற்றும் சீனா நிறுவனங்களின் செயலால் உலக நாடுகளின் உணவு பொருட்கள் விநியோக சங்கிலி பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டிய உணவுப் பொருட்கள் தேவையில்லாத இடத்தில் முடங்கியுள்ளது.
குறிப்பாகத் தாய்லாந்து அரிசியையும், கனடா பீஸ்-ஐயும், இந்தியா மலைபோல குவிந்திருக்கும் சர்க்கரை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்படப் பல நாடுகள் உணவுப் பொருட்களை மற்றும் இதர பொருட்களைக் கண்டெய்னர் இல்லாத காரணத்தால் ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
உலக நாடுகள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் குறித்த நேரத்தில் திட்டமிட்டபடி பெற முடியாமல் தவித்து வருகின்றனர் என IM-EX குளோபல் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு தலைவர் ஸ்டீவ் கார்நிக் தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கு முதலும் முற்றிலும் காரணம் சீனா தான்.
கொரோனா பாதிப்புக்குப் பின்
கொரோனா பாதிப்புக்குப் பின் உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா தனது ஆஸ்தான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. கொரோனா தொற்றைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ள நிலையில் சீனாவின் உற்பத்தி அளவு கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
சீனாவின் மாஸ்டர் பிளான்
இந்நிலையில் உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை வேகப்படுத்தவும், சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகக் கப்பல் போக்குவரத்துச் சந்தையில் இருக்கும் கண்டெய்னர்களை அதிக ப்ரீமியம் தொகை கொடுத்து வாங்குவது மட்டும் அல்லாமல், உலக நாடுகளில் இருந்து பொருட்களே இல்லாமல் காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவித்து வருகிறது சீனா.
அதிக லாபம்
கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்குச் சரக்குகளைக் கண்டெய்னர்களில் ஏற்றி டெலிவரி செய்வதை விடவும் சீனாவிற்குக் காலி கண்டெய்னர்களை அனுப்புவது மூலம் அதிக லாபம் கிடைக்கும் காரணத்தால் உலகின் பல பகுதிகளில் இருந்து கண்டெய்னர்கள் சீனாவிற்கு அனுப்பப்படுகிறது.
அதிகப் பாதிப்பு
இதனால் கப்பல் போக்குவரத்துச் சந்தையில் கண்டெய்னர் தட்டுப்பாடு நிலவுவது மட்டும் அல்லாமல், டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் போக்குவரத்து கட்டணமும் அதிகமாகியுள்ளது. இவ்விரண்டின் காரணமாக உணவுப் பொருட்கள் காலதாமதமாகச் செல்வது மட்டும் அல்லாமல் அதன் விலையிலும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
வர்த்தகம் குறைந்தது
IM-EX குளோபல் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு தலைவர் ஸ்டீவ் கார்நிக் கூறுகையில் ஒவ்வொரு வாரமும் தாய்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு வாழைப்பழம், அரிசி மற்றும் டம்பிளக் அனுப்பப்படும், ஆனால் தற்போது வாரத்திற்கு வெறும் 2 முதல் 3 கண்டெய்னர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஏற்றுமதி பாதிப்பு
உலகின் 2வது பெரிய சர்க்கரை ஏற்றுமதி நாடான இந்தியா ஜனவரி மாதத்தில் வெறும் 70,000 மெட்ரிக் டன் சர்க்கரை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதேவேளையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்க்கரை விலை உலக நாடுகளில் 3 வருட உயர்வை அடைந்துள்ளது. இதேபோல் வியட்நாம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காஃபி கொட்டைகளின் ஏற்றுமதி 20 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.
கப்பல் போக்குவரத்து
காலி கண்டெய்னர்களை ஒரு நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு அனுப்புவது புதியது அல்ல, ஆனால் பொதுவாகக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாடுகளுக்குச் செல்லும் போது முடிந்த வரையில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்வது தான் வழக்கம். ஆனால் இப்போது அதிக லாபத்திற்காகக் காலி கண்டெய்னர்கள் சீனாவிற்கு அனுப்பி வருகின்றனர்.
10 மடங்கு விலை வித்தியாசம்
உதாரணமாகச் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குக் கப்பல் மூலம் விநியோகம் செய்வதற்கும் அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு விநியோகம் செய்வதற்கும் 10 மடங்கு விலை வித்தியாசம் உள்ளது. இதன் காரணமாக 50 சதவீத தள்ளுபடி விலையில் காலி கண்டெய்னர்களைச் சீனாவிற்குக் கப்பல் நிறுவனங்கள் அனுப்பி வருகிறது.
அமெரிக்கா சீனா
அமெரிக்கக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் சமீபகாலமாகச் சோபீன் முதல் தானிய வகைகள் வரை அனைத்தையும் ஆசியவிற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில், சீனா அமெரிக்காவின் கப்பல் போக்குவரத்து வளர்ச்சியைத் தடை செய்யும் விதமாகத் தற்போது காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவித்து வருகிறது.