அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
வர்த்தகப் போரில் தொடங்கிய பிரச்சனை, இப்போது வார்த்தைப் போர் வரை வந்து இருக்கிறது. எப்போது பார்த்தாலும், சர்வதேச ரங்கில். இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
அமெரிக்கா எகிறும் போதெல்லாம், ஓரளவுக்காவது மெளனம் காக்கும் சீனா, இந்த முறை "திருப்பி அடிப்பேன் பாத்துக்க" என்கிற ரேஞ்சில் தெனாவெட்டாக பேசி இருக்கிறது. அப்படி என்ன பிரச்சனை..? வாங்க பார்ப்போம்.
உய்கர் (Uighur) இஸ்லாமியர்கள்
சிங் ஜியாங் (Xinjiang) என்கிற பகுதியில் தான் இந்த உய்கர் இஸ்மாலிமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 1949-ம் ஆண்டு சீனா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட போது உய்கர் இஸ்லாமியர்கள் வாழும் சிங் ஜியாங் பகுதியும், சீனாவின் ஒரு பகுதி தான். ஆனால் திபெத்தைப் போல தன்னாட்சி அதிகாரம் கொண்டது.
என்ன பிரச்சனை
சீனாவுக்குள் தானே, சிங் ஜியாங்கும் இருக்கிறது. மெல்ல சீன அரசு, உய்கர் முஸ்லிம்களின் மத, வணிக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தொடங்குகிறது. 1990-களில் சிங் ஜியாங்கில், சீனாவுக்கு எதிராக கலவரங்கள் அதிகரிக்க, சீனாவும் தன் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடத் தொடங்கியது. பிரச்சனை மெல்ல பெரிதானது.
பெரும்பான்மை டூ சிறுபான்மையினர்கள்
சிங் ஜியாங் பகுதியில் உய்கர் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினராக இருந்தார்கள். ஆனால் கடந்த பல தசாப்தங்களில், மெல்ல ஹான் இனத்தவர்கள் நிறைய குடியேறியதால், இன்று உய்கர் முஸ்லிம்கள் சிங் ஜியாங் பகுதியில் மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். உய்கர் முஸ்லிம்கள் மீது தீவிரவாத அச்சுறுத்தல் சாயம் பூசி, சீனா, சிங் ஜியாங் பகுதியில் தங்கள் அடக்குமுறையை நியாயப்படுத்த முயல்வதாகச் செய்திகள் வெளியாகின்றன.
அமெரிக்கா வருகை
இந்த விஷயத்தைத் தான் சமீபத்தில் அமெரிக்க கையில் எடுத்தது. Uyghur Human Rights Policy Act of 2020-ஐக் கொண்டு வந்து இருக்கிறது அமெரிக்கா. இந்த சட்டத்தை கடந்த 17 ஜூன் 2020 அன்று தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் கொடுத்து சட்டமாக்கினார். இந்த சட்டத்தின் வழியாக, உய்கர் இன மக்கள், சீனாவின் சிங் ஜியாங் பகுதியில் நடத்தப்படுவதைக் குறித்தும், சிங் ஜியாங்கில் இருக்கும் மறு கல்வி கேம்புகளைக் குறித்தும் பேச பல நாடுகளுக்கும் வழிவகுக்கிறது.
இதெல்லாம் செய்யலாம்
அதோடு, இந்த சட்டத்தைச் சுட்டிக் காட்டி சீன அதிகாரிகள், அமெரிக்காவுக்குள் வருவதை தடை செய்யலாம். அதோடு இந்த உய்க்ர் சட்டத்தை வைத்து, அமெரிக்காவில் இருக்கும், எந்த சீன அதிகாரியின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களையும் Freeze செய்யலாமாம். இதை எல்லாம் தெரிந்த கொண்ட பின் சீனா வெறுமனே வாய் மூடி இருக்குமா என்ன?
சீனா பதிலடி
இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததால், சீனா சில தினங்களுக்கு முன்பு பதிலடி கொடுப்பேன் என கோபத்தில் கொக்கரித்து இருக்கிறது. சீனாவும், அமெரிக்காவை திருப்பித் தாக்கும். அன்று அமெரிக்கா அனைத்து பின் விளைவுகளையும் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும் என உரக்கச் சொல்லி இருக்கிறது சீனாவின் வெளி உறவுத் துறை அமைச்சகம்.
தேவை இல்லாத தலையிடு
மேலும், அமெரிக்கா, சீனாவின் உள் விவகாரங்களில், தேவை இல்லாமல் மிக மோசமாக தலையிட்டுக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா தன் தவறை சரி செய்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் இந்த சட்டம், சிங் ஜியாங் பகுதியில் வாழும் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான பொய்யான பிம்பத்தைக் காட்டுகிறது எனவும் சொல்லி இருக்கிறது சீனாவின் வெளி உறவுத் துறை அமைச்சகம்.
அமெரிக்காவின் இறுகும் பிடி
இந்த Uyghur Human Rights Policy Act of 2020 சட்டம் ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் "சீனாவிடம் இருந்து, அமெரிக்க, முழுமையாக பிரிந்து கொள்ளும் (Complete Decoupling) ஆப்ஷன் இன்னமும் இருக்கிறது" என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்து இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தை
கடந்த சில தினங்களாகத் தான் ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாயின. ஆனால் இப்போது மீண்டும் இரு நாட்டு பெரும் தலைகளும் அடித்துக் கொள்வதைப் பார்த்தால், பங்குச் சந்தைகள் மீண்டும் சரியத் தொடங்கிவிடுவோ என்கிற பயம் தான் அதிகமாக இருக்கிறது. ட்ரம்போ, ஜி ஜின்பிங்கோ கொஞ்சம் உலக பொருளாதாரத்தையும் மனதில் வைத்துக் கொண்டு நடந்தால் சரி. இல்லை என்றால் முதலீட்டாளர்களுக்கு சிரமம் தான்.