கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மனிதர்களின் உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம், பொருளாதாரங்களைப் பந்தாடிக் கொண்டு இருக்கிறது.
அதிலும் குறிப்பாக வங்கிகளுக்கு பெரிய தலைவலிகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ். அந்த தலைவலியின் பெயர் மோசமான கடன்கள் (Bad Debts).
சீனாவில் இந்த மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரித்துவிடக் கூடாது என்கிற நோக்கில் ஒரு புதிய செக் வைத்து இருக்கிறது பீபில் பேங்க் ஆஃப் சீனா (PBOC - People Bank of China).
என்ன செக்
கொரோனா வைரஸ் பிரச்சனையில் மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக, வியாபார கணக்கு மற்றும் ரீடெயில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பெரிய பணப் பரிவர்த்தனைகளை எல்லாம் செய்வதற்கு முன்பே தெரிவிக்குமாறு (Pre report) சொல்லி இருக்கிறது பீபிள் பேங்க் ஆஃப் சைனா. இந்தியாவுக்கு எப்படி ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு எல்லாம் வழி காட்டும் அமைப்போ, அதே போல சீனாவில் பீபில் பேங்க் ஆஃப் சீனா.
எந்த மாகாணங்களில்
சீனாவின் மத்திய வங்கி ஹெபி (Hebei) மாகாணத்தில் தான், வியாபார கணக்குகள் மற்றும் ரீடெயில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரிய பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு முன் கூட்டியே தெரிவிக்கச் சொன்னார்கள். இந்த இரண்டு வருட திட்டத்தை மெல்ல சீனாவின் மற்ற முக்கிய மாகாணங்களான சிஜியாங் (Zhejiang) மற்றும் சென்சென் (Shenzhen) மாகாணங்களுக்கும் அக்டோபர் மாதத்துக்குள் விரிவாக்கப் போகிறார்களாம்.
ஏன் அவசரம்
அட என்னங்க, மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரிக்கிறது என்பதற்கு இத்தனை கடுமையான நடவடிக்கைகளா? என்று கேட்கிறீர்களா. சமீபத்தில் தான் சீனா பல வங்கிகளுக்கு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, போராடிக் கொண்டிருந்த பல வங்கிகளை மீட்டது. எனவே அப்படி மீண்டும் வங்கிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து மீட்க முடியாது என்பதால் தான் சினா அதிரடியாக இப்படி ஒரு செக்கை வைத்திருக்கிறது.
எவ்வளவு தொகை
வியாபார கணக்குகளை வைத்திருப்பவர்கள் 5 லட்சம் யுவானுக்கு மேல் செய்யும் பணப் பரிமாற்றங்களை முன் கூட்டியே சொல்ல வேண்டுமாம். அதே போல தனிநபர்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளில் 1 - 3 லட்சம் யுவானுக்கு மேல் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டுமாம். தனி நபர்கள் எந்த மாகாணத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து 1 - 3 லட்சம் யுவான்களுக்குள் அளவு தீர்மானிக்கப்படுமாம்.
எஸ் & பி குளோபல் கருத்து
சீனாவின் மத்திய வங்கியோ, சீனாவின் 41 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வங்கி சிஸ்டத்தை பாதுகாக்கவும், உதவவும் நினைக்கிறார்கள். ஆனால் எஸ் & பி குளோபல் நிறுவனத்தின் கணக்குப் படி, இந்த ஆண்டில் மட்டும், 8 ட்ரில்லியன் யுவான் மோசமான கடன்கள் ஏற்படலாம் எனக் கணித்து இருக்கிறது. இதை எல்லாம் சீனா எப்படி சமாளிக்கப் போகிறதோ தெரியவில்லை.