தைவான் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக சீனா - ஜப்பான் மத்தியில் கருத்து மோதல்களில் துவங்கி தற்போது வர்த்தக போராக மாறி வருகிறது. இன்று காலை ஜீ ஜின்பிங் தலைமையிலான அரசு 4 ஜப்பான் பாதுகாப்பு துறை ஆராய்ச்சி நிறுவனங்களை பிளாக்லிஸ்ட் செய்துள்ளது. இதோடு கிட்டத்தட்ட 20 ஜப்பான் நிறுவனத்தின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி கிளப்பியுள்ளது.
தைவான் மீது சீனா போர் தொடுக்கவும், அந்நாட்டை கட்டுப்படுத்துவும் சீனா உள்நாட்டு விவகாரமாக பார்க்கிறது. ஆனால் உலக நாடுகள் இதை எதிர்கிறது. குறிப்பாக ஜப்பான் பிரதமர் Sanae Takaichi சீனா தைவான் மீது தாக்குதல் நடத்துவது ஜப்பானுக்கு வெளியுறவு விவகாரம் என்றும், தேவைப்படுமாயின் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்தார். சீனா இதை மிரட்டலாக பார்த்து வருகிறது. இதனால் ஜனவரி மாதம் முதல் சீனா அடுத்தடுத்து ஜப்பான் உடனான வர்த்தகத்தை முடக்கி வருகிறது.

சீனாவின் வர்த்தக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜப்பான் நாட்டின் நேஷ்னல் இன்ஸ்டியூட் பார் டிபென்ஸ் ஸ்டெடீஸ் அண்ட் ரிசர்ச் சென்டர், மிட்சுபிஷி எலக்ட்ரிக், மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் உட்பட 20க்கும் அதிகமான நிறுவனங்கள் ஏற்றுமதி கட்டுப்பாடு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.
இந்த ஏற்றுமதி தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களுக்கு, எந்தொரு அமைப்பும், தனிநபரும் Dual Use அதாவது வர்த்தகம் மற்றும் ராணுவம் என இரு தரப்புக்கும் பயன்படுத்தப்படும் சீனா சரக்குகள், மென்பொருள், தொழில்நுட்பம் ஆகியவைற்றை ஏற்றுமதி செய்யக்கூடாது என அறிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இன்றைய தடை அறிவிப்பில் சீனா டிரோன், பாதுக்காப்பு, அணுசக்தி துறை சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களையும் மொத்தமாக இந்த தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது.
இதேபோல் சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை யார் அனுப்புகிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் ஜப்பான் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் விதமான பொருட்களை மொத்தமாக முடக்க திட்டமிட்டு வருகிறது சீனா.
ஜப்பான் பிரதமரின் நவம்பர் மாத பேச்சுக்கு பின்பு சீனா தொடர்ந்து தனது ஏற்றுமதியை பல்வேறு முனையில் இருந்து கட்டுப்படுத்தி வருகிறது. உதாரணமாக சீனா ஜனவரி மாதம் முதல் முறையாக Dual Use எற்றுமதியை தடை செய்யும் கொள்கையை கொண்டு வந்தது. இதன் பின்பு பிப்ரவரி மாதம் 20 ஜப்பான் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது, தற்போது கூடுதலாக 20 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய அறிவிப்புக்கு பின்பு தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் சரிய துவங்கியது. இது வெறும் ஏற்றுமதி தடையல்ல, ஜப்பான் நாட்டின் வளர்ச்சியை முடக்கும் விஷயமாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் ஜப்பான் பல ஆண்டுகளுக்கு பின்பு தனது ராணுவத்தை பலப்படுத்த திட்டமிட்டு வரும் வேளையில் சீனாவின் இந்த முடக்கம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications

