சீன மத்திய வங்கி நாடு முழுவதும் இருக்கும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு அனைத்து விதமான வர்த்தகத்திற்கும், பொருளாதார நடவடிக்கைகளுக்கும் டிஜிட்டல் அல்லாமல் பணத்தின் வாயிலாகவும் பேமெண்ட்-ஐ பெற வலியுறுத்தியுள்ளது.
மேலும் பணத்தை ஏற்க மறுக்கும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்குக் கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் எனச் சீன மத்திய வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் துறை
டிஜிட்டல் பேமெண்ட் துறையில் முன்னோடியாக இருக்கும் சீனாவில் தற்போது மக்கள் அதிகளவில் பார் கோடு பரிமாற்றம், அல்லது அலிபாபா, டென்சென்ட் நிறுவனங்களின் அலிபே மற்றும் டென்பே ஆகிய செயலிகளையே தினசரி பணப்பரிவர்த்தனை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான நிதி பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
சீன அரசு
சீன அரசும் நாட்டின் புதுமை, தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளைப் பெரிய அளவில் ஊக்கப்படுத்திய நிலையில், சீனாவில் தற்போது 95 சதவீத மக்கள் ஆன்லைன் பேமெண்ட் சேவை தினசரி பயன்படுத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் சீனாவில் தற்போது பல வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களும் பணத்தைப் பெற மறுப்பு தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகச் சீன மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவை
இதற்கு முக்கியக் காரணம் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான மற்றும் எளிமையான வர்த்தகச் சூழல் அமைத்துக் கொடுக்க டிஜிட்டல் பேமெண்ட் மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் அதிகளவில் பயன்படுத்தும் போது செலவுகளைப் பெரிய அளவில் குறைக்க முடியும் எனச் சீன வியாபாரிகளும் மற்றும் வர்த்தகர்களும் நம்புகின்றனர்.
அலிபே, டென்பே, வீசாட் பே ஆதிக்கம்
இந்த நிலை கொரோனா தொற்றுக் காலத்தில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. 99 சதவீத மக்களும் வியாபாரிகளும் டிஜிட்டல் பேமெண்ட் மட்டுமே ஏற்கும் நிலை சீனாவில் உருவாகியுள்ளது. இதனால் தனியார் சேவை நிறுவனங்களான அலிபே, டென்பே, வீசாட் பே ஆகியவை பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் சீனா நிதியியல் சந்தையில் செலுத்துகிறது.
சீனாவின் மக்கள் வங்கி
இந்நிலையில் People's Bank of China, எந்தொரு தனிநபர் அல்லது அமைப்பும் யுவான் நாணய வாயிலான பரிமாற்றங்களை ஏற்க மறுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மறுக்கும் தனிநபர் அல்லது அமைப்பிடம் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என PBOC தெரிவித்துள்ளது.
விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு
இதேபோல் வங்கி அல்லாத பேமெண்ட் நிறுவனங்கள் (அலிபே, டென்பே, வீசாட் பே) இனி கேஷ்லெஸ் (Cashless) பேமெண்ட்-ஐ ஆதரிக்கும் வகையில் எவ்விதமான விளம்பரங்களும், பரப்புரையும் செய்யக் கூடாது எனவும் சீன வங்கி தெரிவித்துள்ளது.
சீனாவின் அரசு சேவைகள்
இதேவேளையில் சீனாவில் அரசு சேவைகளுக்காக அதாவது மருத்துவம், தண்ணீர், மின்சாரம், கேஸ் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் புரட்சி
பேமெண்ட் துறையில் ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் புரட்சி இளைய தலைமுறைக்கு மிகவும் எளிதாக இருந்தாலும் முதியவர்களுக்கும், டிஜிட்டல் சேவைக்குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கும் மிகவும் கடினமாக உள்ளது என People's Bank of China தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்கள் மத்தியில் குழப்பம்
டிஜிட்டல் புரட்சியை இதுநாள் வரையில் ஆதரித்து வந்த சீனா, இதில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த நிலையில் திடீரென டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளின் வளர்ச்சிக்குத் தடை போடும் வகையிலும், பணப் பரிமாற்றத்தை ஆதரிக்க வேண்டும் என நெருக்கடி அளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.